சென்னை: மணல் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யும் வாகனங்களை போலீசாரிடம் ஒப்படைப்பது விதி மீறலாகும் என்று தாசில்தார்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பொன்னுசாமி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு: எனக்கு டிப்பர் லாரி உள்ளது. இந்த லாரியை மணல் கடத்தியதாக கூத்தாநல்லூர் தாசில்தார் பறிமுதல் செய்தார். இந்த லாரியை சம்பந்தபட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக்கவில்லை. எனவே, எனது லாரியை விடுவித்து என்னிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் ஆஜராகி, லாரி பாதுகாப்புக்காக கொரடாச்சேரி போலீசாரிடம் தாசில்தார் ஒப்படைத்துள்ளார் என்றார். இதற்கு மனுதாரர் தரப்பு வக்கீல் ஏ.ஆர்.சுரேஷ் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மணல் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை உடனடியாக சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில்தான் தான் தாசில்தார்கள் ஒப்படைக்க வேண்டும். பாதுகாப்புக்காக போலீசாரிடம் ஒப்படைப்பது என்பது விதிமீறிய செயலாகும். மனுதாரர் உரிய மனுவை தாக்கல் செய்து சட்டப்படி தனது லாரியை பெற்றுக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.