×

தமிழகத்தில் பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக வளரும்: தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டா பேச்சு

சென்னை: ‘’தமிழகத்தில் பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக வளரும்’’ என அக்கட்சியின் தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா கூறினார். 16 மாவட்டங்களில் பாஜக அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா திருவள்ளூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாநில பொறுப்பாளர் முரளிதர் ராவ் தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் பொன் ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, இல.கணேசன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில கட்டிட குழு தலைவர் சக்கரவர்த்தி, மாவட்ட தலைவர் ஜெ.லோகநாதன், மாவட்ட பொது செயலாளர்கள் ஏ.ராஜ்குமார், ராஜசிம்ம மகேந்திரவர்மா ஆகியோர் வரவேற்றனர்.

இதில், தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு, 16 மாவட்டங்களில் பாஜ அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் பேசியதாவது: இந்தியாவில் தமிழ் மொழியானது தொன்மையான மொழியாக உள்ளது. இங்கு தொன்மையான கோயில்கள் அதிகளவில் உள்ளன. திருவள்ளுவர், வ.உ.சி., சுப்ரமணிய பிள்ளை, மக்களின் ஆதரவு பெற்ற அப்துல் கலாம் ஆகியோரை கொடுத்தது இந்த தமிழ் மண். உலக பொதுமறையான திருக்குறள் இந்த மண்ணில் தோன்றி இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 25 லட்சம் உறுப்பினர்கள் பாஜவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்காக உங்களை பாராட்டுகிறேன். கடைநிலை தொண்டனையும் வாழ்க்கையில் முன்னேற பாஜ வழிசெய்கிறது. மோடி இருக்கிறார் நல்லது நடக்கும் என மக்கள் பேசும் அளவிற்கு கொண்டு வந்துள்ளோம். பாஜ ஆட்சியில் 14வது நிதியாண்டில் 5,50,000 கோடி, அதாவது 50 மடங்கு அதிகமாக தமிழகத்திற்கு கொடுத்துள்ளோம். தமிழகத்தில் 700க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், 80க்கும் மேற்பட்ட திறன் மேம்பாட்டு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா தொழிற்சாலை புனரமைக்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

பல்லாயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக சென்னை, கோவை, சேலம் பகுதிகளில் ராணுவ பூங்கா கொண்டு வரப்பட்டு உள்ளது. மதுரையில் 1700 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 3,000 கோடி, மோனோ ரயில் திட்டத்துக்கு 3,267 கோடி திட்டமிடப்பட்டு உள்ளது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 5,36,200 வீடுகள் கட்ட தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 20,000 கோடியில் ரயில் தடங்களை மேம்படுத்த தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்துள்ளோம். காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

அதிமுகவிலிருந்து விலகிய ராதாரவி, நடிகை நமீதா பாஜவில் இணைந்தனர்

சென்னை வந்த பாஜ தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டாவை நடிகர் ராதாரவி, நடிகை நமீதா ஆகியோர் நேற்று சந்தித்து பாஜவில் தங்களை இணைத்துக் கொண்டனர். முன்னதாக மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் முன்பு பாஜக சார்பில் ஜே.பி.நட்டாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர்கள் கே.ஆர்.லட்சுமணன், இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், கேசவவிநாயகம், வானதி சீனிவாசன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் செம்பாக்கம் அ.வேதசுப்பிரமணியம், பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம், தென்சென்னை மாவட்ட பாஜக தலைவர் டால்பின் பா.ஸ்ரீதரன், தென்சென்னை மாவட்ட பாஜக பொருளாளர் கருப்பையா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : BJP ,Tamil Nadu ,Nata , J.P. Natta
× RELATED வாயால் வடை சுட்டு தமிழ்நாட்டின்...