×

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தலில் 64% வாக்குப்பதிவு

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கான முதல்கட்ட தேர்தலில் 63.12 சதவீத வாக்குகள் பதிவாகின. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் 5 கட்டமாக நடத்தப்படுகிறது. இதில் 13 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தல் நேற்று நடந்தது. நக்சலைட் பாதிப்புள்ள மாநிலம் என்பதாலும், பல பகுதிகள் பின்தங்கியவை என்பதாலும் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 3 மணியுடன் முடிக்கப்பட்டது. மொத்தம் 37.83 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாவர்.

மொத்தம் 4,862 வாக்குச்சாவடிகளில் 461 பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலையிலேயே மக்கள் நீண்டவரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். பெரும்பாலான இடங்களில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்தாலும், ஒரு சில இடங்களில் சிறு, சிறு வன்முறை சம்பவங்கள் நடந்ததாக போலீசார் கூறி உள்ளனர். மேலும், பிஷ்ணுபூர் தொகுதிக்கு உட்பட்ட பனாலத்-பிரன்பூர் கிராமங்களுக்கு இடைப்பட்ட கால்வாய் பாலத்தை ஒட்டி வனப்பகுதியில் நக்சலைட்கள் வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

மாலை 3 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 63.12 சதவீத வாக்குகள் பதிவானது. அடுத்தடுத்த கட்ட தேர்தல்கள் வரும் 7, 12, 16 மற்றும் 20ம் தேதிகளில் நடக்கிறது. டிசம்பர் 23ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இத்தேர்தலில், ஆளும் பாஜவுக்கு எதிராக ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

Tags : phase ,Jharkhand Jharkhand , Jharkhand
× RELATED 4ம் கட்ட தேர்தல் 96 தொகுதியில் மனு தாக்கல் துவக்கம்