போபால்: காதலிப்பதாகக் கூறி கொலை வழக்கில் தொடர்புடைய தலைமறைவு தாதாவை மத்திய பிரதேச மாநில பெண் சப் இன்ஸ்பெக்டர் பிடித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம், சதார்பூர் மாவட்டம் நவுகோன் பகுதியை சேர்ந்தவர் பாலகிஷன் சவுபே. பெரிய தாதாவான அந்த நபர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தலைமறைவான அவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டினர். ஆனால் பிடிக்க முடியவில்லை. அவரை பிடித்து கொடுத்தால் ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என மாவட்ட எஸ்.பி., அறிவித்தார். இந்நிலையில், பாலகிஷன், தனது திருமணத்திற்காக, பெண் தேடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சப் இன்ஸ்பெக்டர் மாதவி என்பவர், பாலகிஷனை திருமணம் செய்வதாக கூறி தனது பழைய போட்டோவை, அவரது நண்பர் மூலம் அனுப்பியுள்ளார். போட்டோவை பார்த்து மயங்கிய பாலகிஷன், மாதவியை சந்திக்க ஒப்பு கொண்டுள்ளார். இதற்கான இடமும் முடிவு செய்யப்பட்டது. குறிப்பிட்ட இடத்திற்கு வந்த பாலகிஷனை, அங்கு மறைந்திருந்த போலீசார் கைது செய்தனர். பெண் சப் இன்ஸ்பெக்டரின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.