ராம்நகர்: பெங்களூருவில் பிடதியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் குஜராத் மாநில போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். கர்நாடகா மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள பிடதி நித்தியானந்தா ஆசிரமத்தில் குஜராத் போலீசார் அதிரடியாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நித்தியானந்தா கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எங்குள்ளார் என்று தெரியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனிடையே அவருடைய குஜராத் மாநில ஆசிரமத்தில் பல விதிமீறல்கள் நடத்துவதாக குற்றசாட்டு எழுந்தது. இதையடுத்து அகமதாபாத் போலீசார் நித்தியானந்தாவின் குஜராத் ஆசிரமத்தை சோதனை செய்த போது அங்கு சட்டவிரோதமாக குழந்தைகளை வேலை வாங்குவதும், அவர்கள் துன்புறுத்தப்படுவதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் நித்தியானந்தாவின் இரண்டு தலைமை நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக நித்தியானந்தா எங்கு இருக்கிறார்?, எங்கிருந்து நித்தியானந்தா ஆசிரமத்திற்கு பணம் திரட்டப்படுகிறது? போன்ற பல தகவல்களை தற்போது குஜராத் போலீசார் விசாரித்து வருகிறார்கள். தற்போது சுமார் 10க்கும் மேற்பட்ட குஜராத் போலீசார் ராம்நகர் காவல்துறையுடன் சேர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் ஏற்கனவே அகமதாபாத்தில் நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து சுமார் 41 ஐபேர்ட்களும், 14 மடிக்கணினிகளும் கைப்பற்றப்பட்டது. அதிலிருந்து குஜராத் போலீசாருக்கு பல தகவல்கள் நித்தியானந்தாவுக்கு எதிராக கிடைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது பிடதி ஆசிரமத்தில் சோதனையானது நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் நித்தியானந்தா எங்குள்ளார் என்பது குறித்து பல தகவல்கள் கிடைக்கும் என குஜராத் போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் பிடதி ஆசிரம சோதனையானது இன்று இரவு வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.