திருவனந்தபுரம்: ‘நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய மெமரி கார்டு நகலை நடிகர் திலீப்புக்கு வழங்க வேண்டாம்,’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் மலையாள சினிமா முன்னணி நடிகை ஒருவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, இரவில் காரில் செல்லும்போது ஒரு கும்பலால் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இந்த கடத்தலுக்கு சதி திட்டம் தீட்டியதாக நடிகர் திலீப்பை போலீசார் கைது செய்தனர் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். நடிகை பலாத்காரம் செய்யப்பட்டபோது அந்த சம்பவத்தை கும்பலில் இருந்த ஒருவர் செல்போனில் படம் பிடித்தார். இதன் மெமரி கார்டு நகலை வழங்கும்படி திலீப் தாக்கல் செய்த மனுக்கள், கீழ் நீதிமனறங்களில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி காம்வில்கர் அமர்வு, மெமரி கார்டை திலீப்புக்கு வழங்கக் கூடாது என்றும், தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் பார்த்து கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டது.