திருச்சி: திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்ட, டிஆர்ஓ சாந்தி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் வந்திருந்தனர். இதில் அவர்கள் மேல்சட்டை அணியாமல் வெங்காய செடிகளை கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டு கோஷம் எழுப்பியவாறு வந்தனர். துவரங்குறிச்சியை சேர்ந்த நாச்சியம்மாள் மயக்கமடைந்தார். உடனே அவருக்கு முதலுதவி செய்யப்பட்டது. இதில் 5 பேர் நுழைவு வாயிலில் இருந்து தேங்கியுள்ள மழை நீரையும் பொருட்படுத்தாது அரை நிர்வாணத்துடன் தரையில் உருண்டு கூட்ட அரங்கத்திற்குள் சென்று டிஆர்ஓவிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து அய்யாக்கண்ணு கூறுகையில், ‘‘வெங்காயத்தை விவசாயிகளிடம் வியாபாரிகள் கிலோ ரூ.20-க்குள்ளாகதான் வாங்குகிறார்கள். ஆனால், கிலோ ரூ.90-க்கும் ரூ.100-க்கும் சந்தையில் விறக்கப்படுகிறது. இடைத்தரகர்கள் மட்டுமே கொள்ளை லாபம் ஈட்டுகிறார்கள். எனவே, வெங்காய விலை உயர்வைக் கண்டித்தும், வெங்காயத்தை விவசாயிகளிடமிருந்து கிலோவுக்கு 50 ரூபாய் விலை நிர்ணயித்துது அரசு கொள்முதல் செய்ய வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடந்தது’’ என்று கூறினார். இந்த போராட்டத்தால் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.