×

ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகுந்து ஆயுதம் கொள்ளையடித்த 11 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை

சென்னை: அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் கடந்த 1997ஆம் ஆண்டு வெடிகுண்டுகளுடன் நுழைந்த கும்பல் போலீஸ் நிலையத்தில் இருந்த போலீஸ்காரர்களை ஒரு அறையில் வைத்து பூட்டி வைத்து விட்டு போலீஸ் நிலையத்தில் இருந்த பெரிய துப்பாக்கிகள், சீருடைகள், துப்பாக்கி தோட்டாக்கள், வாக்கி - டாக்கி  உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றனர். இந்த வழக்கு சம்பந்தமாக சுந்தரம், வெங்கடேசன், ரவிச்சந்திரன், முருகையன், சுந்தரமூர்த்தி, ஜெயச்சந்திரன், சேகர், சரவணன், நாகராஜன், செங்குட்டுவன், ஜான் பீட்டர், உத்திராபதி, பொன்னிவளவன், நடராஜன், வீரையா உள்ளிட்ட 15 பேரை “க்யூ” பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோதுசுந்தரம், சரவணன், உத்திராபதி ஆகிய 3 பேர் இறந்து விட்டனர். வீரையா அப்ரூவர் ஆகி விட்டார்.  நேற்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மீதமுள்ள 11 பேருக்கும் நீதிபதி செந்தூர்பாண்டி தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரும் குற்றவாளிகள் என காலையில் தீர்ப்பு வழங்கினார். தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்து மாலையில் 11 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் விஜயராஜ் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் 72 சாட்சிகள், 101 ஆவணங்களும், 67 சான்று பொருட்களும் சமர்பிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : robbers ,police station ,Andimadam , Prison
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...