தண்டையார்பேட்டை: ராயபுரம் கல்மண்டபம் கிரேஸ் கார்டன் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 3 வாலிபர்கள் பட்டாக்கத்தியுடன் தெருவில் சுற்றித் திரிந்தனர். இவர்கள், திடீரென அவ்வழியே சென்ற பொதுமக்களை வெட்டுவதற்கு பாய்ந்தனர். மேலும் அங்கிருந்த வாகனங்களை அரிவாளால் அடித்து உடைத்தும், கத்தியை சாலையில் தேய்த்தும் ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ராயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். போலீசார் வருவதை தெரிந்ததும் 3 பேரும் அங்கிருந்து பைக்கில் தப்பினர். இதையடுத்து, போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில், புதுவண்ணாரப்பேட்டை நாகூரார் தோட்டத்தை சேர்ந்த விஜயன் (33), அதே பகுதியை சேர்ந்த சூர்யா (21), எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த மனோ (26) ஆகியோர் ரகளையில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை நேற்று கைது செய்தனர்.இவர்களிடம் இருந்து பட்டாக்கத்தி, செல்போன், பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.