சென்னை : கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து வந்த தொழிலாளியை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டம், செந்துரை தாலுக்காவை சேர்ந்த சகோதரர்கள் கலியமூர்த்தி (47), கண்ணன் (42). இருவரும் கடந்த 20 ஆண்டுகளாக கோயம்பேடு மார்கெட்டில் மூட்டை தூக்கும் வேலை செய்து வந்தனர். அதே மார்கெட்டில் திருச்சி கருங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆனந்த் (24) என்ற வாலிபரும் மூட்டை தூக்கும் வேலை செய்து வந்தார்.
ஆனந்தன் அடிக்கடி கண்ணனிடம் சண்டையிடுவதும், கிண்டல் செய்வதும் என இருந்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு இரவு ஆனந்தன் கண்ணனிடம் தகராறில் ஈடுபட்டு, அங்கிருந்த பீர் பாட்டிலை உடைத்து அவர் கழுத்தை அறுத்தார். இதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். கோயம்பேடு போலீசார், கொலை வழக்கு பதிவு செய்து, ஆனந்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள 18வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி சத்யா முன்பு நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜி.ஜெகதீசன் ஆஜராகி வாதிட்டார். விசாரணையை முடித்த நீதிபதி, இந்த வழக்கில் ஆனந்தன் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
தந்தையை கொலை செய்த மகனுக்கு 10 ஆண்டு சிறை
பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (55). இவரது மகன் ஜெகன் (25). இருவரும் வாடகை வீட்டில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தனர். கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ம் தேதி இரவு ரமேஷுக்கும் மகன் ஜெகனுக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஜெகன் அருகிலிருந்த கருங்கல்லை எடுத்து தந்தை ரமேஷின் தலையில் போட்டார்.
இதில், ரமேஷ் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகனை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி ராமநாதன், தந்தை தலையில் கல்லை போட்டு கொலை செய்த வாலிபர் ஜெகனுக்கு 10 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.