சென்னை: நகைக்கடையில் பணம் கேட்டு மிரட்டிய விவகாரத்தில் 5 வக்கீல்களுக்கு தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பிரபலமான ஜவுளி மற்றும் நகைக்கடையில் பணம் கேட்டு மிரட்டியதாக நவம்பர் 14ம் தேதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசாரின் விசாரணையில் ஐந்து வக்கீல்கள் பணம் கேட்டு மிரட்டியதாக தெரியவந்தது. இதையடுத்து, அந்த 5 வக்கீல்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், வக்கீல்கள் ஜெகதீஸ்வரன், ராம், அமானுல்லா, முருகன், சுந்தரபாண்டிய ராஜா ஆகியோர் மீது புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது.
இந்த விசாரணையின் அடிப்படையில் 5 வக்கீல்கள் மீது குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து 5 வக்கீல்களும் வக்கீல் தொழில் செய்ய தடை விதித்து தமிழ்நாடு பார் கவுன்சில் உத்தரவிட்டது. இவர்கள் இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களிலும், தீர்ப்பாயங்களிலும் ஆஜராக தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அறிவிப்பாணையில் தெரிவித்துள்ளது.