வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகனை சிறை நிர்வாகம் கொடுமைப்படுத்துவதாக கூறி நளினி கடந்த அக்டோபர் 26ம் தேதி உண்ணாவிரதம் தொடங்கினார். அதிகாரிகள் உறுதியையடுத்த்து 11 நாளுக்குப்பின் கடந்த 5ம் தேதி உண்ணாவிரதத்தை கைவிட்டார். நளினியை தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்த முருகனும் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
இந்நிலையில், பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி விடுதலை தாமதம், பரோல் வழங்குவதில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால், தன்னை கருணை கொலை செய்யக்கோரி பிரதமருக்கு ஒரு பக்க மனுவை நளினி எழுதி, சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஆண்டாளிடம் கொடுத்து விட்டு சாகும் வரை உண்ணாவிரதத்தை நேற்று காலை தொடங்கினார். இதனால் சிறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.