திருமலை: ஐதராபாத்தின் சம்ஷாபாத் நரசய்யபல்லியைச் சேர்ந்தவர் தர். இவரது மனைவி விஜயம்மா. தர் மெகபூப் நகரில் கல்வித்துறையில் முதுநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள்கள் பிரியங்கா, பவ்யா. இதில் பிரியங்கா கால்நடை மருத்துவராக மாதாப்பூரிலும், பவ்யா விமான நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், பிரியங்கா நேற்று முன்தினம் வழக்கம்போல் மருத்துவமனைக்கு சென்று மீண்டும் வீட்டுக்கு வந்தார். பின்னர், மாலை மருத்துவமனையில் வேலை இருப்பதாக கூறி மொபட்டில் புறப்பட்டு சென்றார். இரவு 9.30 மணி அளவில் பிரியங்கா, தனது தங்கை பவ்யாவிற்கு போன் செய்து மொபட் பஞ்சராகி விட்டதாகவும், சில லாரி டிரைவர்கள் தன்னை முறைத்து பார்த்து வருவதாகவும், தனக்கு பயமாக இருப்பதாகவும் தெரிவித்தாராம்.
மேலும், அங்கிருந்த சிலர் மொபட்டுக்கு பஞ்சர் போட்டு தருவதாக கூறி சென்றதாகவும், கடைகள் அனைத்தும் மூடி இருப்பதாகவும் தெரிவித்தாராம். சுமார் பத்து நிமிடத்தில் மீண்டும் பவ்யா போன் செய்தபோது பிரியங்காவின் செல்போன் எடுக்கவில்லை. சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து பிரியங்கா குறித்து பல இடங்களில் தேடி வந்த அவரது பெற்றோர், ஷேர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, சைபராபாத் போலீஸ் ஆணையாளர் சஞ்சனார் தலைமையில் போலீசார் பிரியங்காவை தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை ரங்காரெட்டி மாவட்டம், சட்டபல்லி பாலத்தின்கீழ் அடையாளம் தெரியாத பெண் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதாக அவ்வழியாக சென்ற பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தில் இருந்த மோதிரம், செயின் ஆகியவற்றை கைப்பற்றி, பிரியங்காவின் பெற்றோருக்கு காண்பித்தனர். இதை பார்த்த அவரது பெற்றோர், அவை தங்களது மகளுடையது தான் என்று கூறி கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க வைத்தது. பிரியங்காவை கடத்தி வந்து கொலை செய்தது லாரி டிரைவர்களா? அவர் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரிக்கின்றனர்.