×

கடலில் தோன்றிய 20 அடி உயர மணல் திட்டு: படகுகள் கடலுக்கு செல்லமுடியாததால் மீனவர்கள் வேலையிழப்பு

அதிராம்பட்டினம்: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் உள்ள ராஜாமடம் ஊராட்சியை சேர்ந்த கீழத்தோட்டம் கிராமத்தில் 750க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் உள்ளன. 200 நாட்டு படகுகள்மூலம் தினம்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள்  இங்கிருந்து கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள்.அக்னி ஆற்றில் வரும் வெள்ளம் கடலில் கலக்கும் முகத்துவாரம் வழியாக நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்வார்கள். கடந்த 3 தினங்களுக்கு முன் இந்த முகத்துவாரத்தில் திடீரென மணல் திட்டு உருவாகி முகத்துவாரத்தில் இருந்து  கடலுக்குள் படகுகள் செல்லும் பாதையை அடைத்தது. கடல் சீற்றம் மற்றும் நீரோட்ட சுழற்சி காரணமாக இவ்வாறு மணல் திட்டு உருவானதாக தெரிவித்த மீனவர்கள் மணல்திட்டை அகற்ற மீனவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியில்  ஈடுபட்டனர்.

தங்கள் சொந்த செலவில் 2 பொக்லைன் இயந்திரத்தை கொண்டு வந்து 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் மணலை அப்புறப்படுத்தினர். இதற்காக ₹2 லட்சம் செலவும் செய்தனர். மறுநாள் கடலுக்கு செல்லலாம் என நினைத்திருந்த நிலையில் நேற்று  முன்தினம் இரவும் திடீரென அடுத்த மணல் திட்டு உருவாகியது. 20 அடி உயரம், 500 மீட்டர் நீளம், 200 மீட்டர் அகலத்தில் உருவானஇந்த மணல் திட்டு காரணமாக கீழத்தோட்டம் துறைமுக வாய்க்கால் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் படகுகளை கடலுக்குள் கொண்டு செல்ல முடியாமல் தொழிலுக்கும் செல்ல முடியவில்லை.100க்கும் மேற்பட்ட படகுகளும், அதில் தொழிலுக்கு செல்வோர் 500 பேரும் முடங்கி உள்ளனர். தற்போது மழைக்காலம் என்பதால்  அக்னி ஆற்றில் வரும் வெள்ளம் கடலுக்குள் செல்ல முடியாமல் மக்கள் அதிகம் வசிக்கும் தெருக்களில் வெள்ளம் பாய்ந்தது.

இதுகுறித்து கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த மீனவர் முருகன் கூறுகையில், எங்கள் பகுதியில் கடலில் இருந்து மணல் திட்டுகள் அதிகளவில் வெளிவந்து கிட்டத்தட்ட 20 அடி உயரத்தில் 500 மீட்டர் நீளத்தில் உள்ளது. இதனால் அக்னி  வெள்ளம் கடலில் உட்புகும் முகத்துவாரம் அடைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக தான் எங்கள் பகுதியில் உள்ள மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல முடியும். இந்நிலையில் தற்போது இந்த முகத்துவாரம் அடைக்கப்பட்டதால் எங்களால்  கடலுக்கு செல்ல முடியவில்லை. இதனால் தற்போது நாங்கள் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக துறைமுக வாய்க்காலை தூர்வார வேண்டும், இந்த மணல் திட்டுகளை அப்புறப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.



Tags : sea ,sand dunes ,fishermen , 20-foot-tall sand dunes found in the sea: fishermen fired because boats cannot get to sea
× RELATED பா.ஜ நிர்வாகிகளை விரட்டியடித்த மீனவர்கள்