×

3 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தடைந்தார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே: டெல்லி விமான நிலையத்தில் மத்தியமைச்சர் வரவேற்பு

டெல்லி: 3 நாள் அரசுமுறை பயணமாக இலங்கை அதிபராக பதவியேற்ற கோத்தபய ராஜபக்சே இந்தியா வந்துள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி  இந்தியாவுக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்திருந்தார். சமீபத்தில் இலங்கை சென்றிருந்த வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், கோத்தபய ராஜபக்சேவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்ததுடன் இந்தியாவுக்கு வருமாறு மோடி விடுத்திருந்த  அழைப்பை நினைவுபடுத்தினார்.

இதற்கிடையே, இலங்கை அதிபராக பதவியேற்ற பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக கோத்தபய ராஜபக்சே இந்தியா வந்துள்ளார். இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற கோத்தபய ராஜபக்சே 3 நாள் அரசுமுறை பயணமாக மாலை 6.30  மணியளவில் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். டெல்லி விமான நிலையம் வந்தடைந்த கோத்தபய ராஜபக்சேவை மத்திய மந்திரி வி.கே.சிங் வரவேற்றார். இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உள்ளிட்டோரை தனித்தனியாக சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார்.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்தியா வருவதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இன்று மதிமுக பொது செயலாளர் வைகோ தலைமையில் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது குறித்து வைகோ  கூறியதாவது: கோத்தபய ராஜபக்சே ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன், எனக்கு சிங்களவர்கள் ஓட்டுப்போட்டு தான் ஆட்சிக்கு வந்தேன் என்று பகிரங்கமாக தெரிவித்தார். அது மட்டுமல்ல, துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் தமிழர்கள் வசிக்கும்  பகுதியில் யாழ்ப்பானை முதலிய சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்தார்.


Tags : Gotabhaya Rajapaksa ,Sri Lanka ,visit ,India , Sri Lankan President Gotabhaya Rajapaksa arrives in India on a three-day official visit
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்