×

தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி 4 பேர் பலி

தண்டையார்பேட்டை:  சென்னை திருவொற்றியூர் அடுத்த விம்கோ நகர் மற்றும் கத்திவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே 2 வாலிபர்கள் உடல் நசுங்கி சடலமாக கிடப்பதாக நேற்று காலை கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, 2 வாலிபர்களின் சடலங்களையும் கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது ஆந்திரா மாநிலம், அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த குமார் (28), கங்கனா (70) என்பதும், இவர்களுடன் 20 பேர் தென்னக ரயில்வே சார்பில் இப்பகுதி ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகளில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.

இருவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு இப்பகுதியில் தண்டவாளத்தை கடக்கும்போது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதி இறந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.தாம்பரம்:  வண்டலூர்-ஊரப்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று மதியம் 25 வயது மதிப்புடைய வாலிபர் ஒருவர் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயற்சித்தபோது மின்சார ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதேப்போல் நேற்று மாலை மறைமலை நகர்-சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையங்களுக்கு இடையே 51 வயது மதிப்புடைய முதியவர் ஒருவர் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயற்சித்தபோது அவ்வழியாக வந்த மின்சார ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



Tags : Rails Four Kills , crossing , rails, Four killed , train collision
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...