அண்ணாநகர்: அமைந்தகரை புல்லா சாலையை ஆக்கிரமித்து கட்டி இருந்த 100க்கும் மேற்பட்ட கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். இதையொட்டி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க அங்கு 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.அமைந்தகரை புல்லா சாலையை ஆக்கிரமித்து சிறுகுறு வியபாரிகள் என 100 மேற்பட்டோர் கடைகள் கட்டி வியாபாரம் செய்து வருகின்றனர். இவ்வாறு சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. மேலும் அமைந்தகரை புல்லா சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று சென்னை பெருமாநகராட்சி மத்திய வட்டார மண்டல அலுவலர் சுந்தராஜன் தலைமையில் செயற்பொறியாளர் பானுக்குமார், மற்றும் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், மற்றும் கலையரசன் உள்பட 100க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் அமைந்தகரை புல்லா சாலையை ஆக்கிரமித்து கட்டிய கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு அப்பகுதி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து போக்குவரத்து துணை ஆணையர் சுரேந்தர் தலைமையில் சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் 50க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றப்பட்டன. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘செனாய் நகர் மண்டலத்தில் 6000 சதுர அடி நிலம் உள்ளது. அங்கு எங்களுடைய வழ்வாதாரம் பாதிக்காத வகையில் சாலையோர வியாபாரிகளுக்கு கடைகள் அமைத்து தர வேண்டும்’’ என்றனர்.