தஞ்சை: தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன் அளித்த பேட்டி: மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சியின் கூட்டணி ஆட்சி பதவியேற்க உள்ளதை வரவேற்கிறோம். அங்கு குறுக்கு வழியில் ஜனநாயகத்தை பகடைகாயாக பயன்படுத்தி பாஜ ஆட்சியை பிடிக்கலாம் என்பதற்கு மரண அடி கிடைத்துள்ளது. புதிய அரசியல் சூழ்நிலையில் அவர்கள் அவ்வாறான தந்திரங்களை செய்ய முடியாது என்பது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பாஜ எந்த அளவுக்கு சர்வாதிகார கட்சி என்பதற்கு ஒரு ஆதாரமாக இவற்றை எடுத்து கொள்ளலாம்.
கொள்கை அளவில் பாஜ- சிவசேனாவுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. தங்களோடு கொள்கை உடன்பட்டவர்களுக்கு விட்டுக்கொடுக்க கூட அவர்கள் தயாராக இல்லை என்பது அந்த சர்வாதிகார மனம் எவ்வளவு மோசமானது, எவ்வளவு ஆதிக்கம் நிறைந்தது என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் 10 ஆயிரம் கோடிக்கும் மேலாக மக்களின் வரிப்பணம் இழப்பு ஏற்பட்டுள்ளது. வெற்றி வாய்ப்பு இல்லையென தெரிந்தால் தேர்தலை நிறுத்தி வைப்பது சட்டவிரோதமானது. எனவே அரசியல் சாசனப்படியும், பஞ்சாயத்துராஜ் சட்டத்தின்படியும் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.