×

ஈரோடு மார்க்கத்தில் இயக்கப்பட்ட நாகர்கோவில்-மும்பை, திருநெல்வேலி-மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் நாமக்கல் வழியே இயக்கம்

சேலம்: நாகர்கோவில், நெல்லையில் இருந்து ஈரோடு மார்க்கத்தில் இயக்கப்பட்ட 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள், நாமக்கல், சேலம் வழியே இனி நிரந்தரமாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம்-நாமக்கல்-கரூர் இடையே புதிதாக 85 கிலோ மீட்டருக்கு அகல ரயில்பாதை அமைக்கப்பட்டது. இந்த பாதையில் மிக குறைவான அளவில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன்படி சென்னை-மதுரை துரந்தோ எக்ஸ்பிரஸ், சென்னை-பழனி எக்ஸ்பிரஸ், பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், சேலம்-கரூர் பாசஞ்சர் ஆகிய ரயில்கள் மட்டும் சென்று வருகிறது. மாறாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு நாகர்கோவில் மற்றும் நெல்லையில் இருந்து புறப்படும் ரயில்கள், கரூர்-ஈரோடு-சேலம் மார்க்கத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களை கரூர்-நாமக்கல்-சேலம் மார்க்கம் வழியே இயக்க வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் தற்போது ஏற்றுக் கொண்டுள்ளது. இதன்படி, நாகர்கோவில்-மும்பை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (16340, 16339), திருநெல்வேலி-மும்பை தாதர் சாளுக்கியா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (11022, 11021) இருமார்க்கத்திலும் ஈரோடு வழியே செல்வதற்கு பதிலாக கரூர்-நாமக்கல்-சேலம் வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

 நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் (16340) வாரந்தோறும் திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில், வரும் டிசம்பர் 2ம் தேதியில் இருந்து கரூருக்கு அடுத்து நாமக்கல், சேலம் வழியே இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (16339), வரும் டிசம்பர் 1ம் தேதியில் இருந்து ஈரோடு செல்லாமல் சேலம்-நாமக்கல்-கரூர் வழியாக இயக்கப்படுகிறது.
இதேபோல், திருநெல்வேலி-மும்பை தாதர் சாளுக்கியா எக்ஸ்பிரஸ் (11022), வாரந்தோறும் திங்கள், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் கரூரில் இருந்து ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக கரூர்-நாமக்கல்-சேலம் வழியே இயக்கப்படுகிறது.
இதன் முதல் இயக்கம் வரும் டிசம்பர் 9ம் தேதி தொடங்குகிறது. மறுமார்க்கத்தில் மும்பை தாதர்-திருநெல்வேலி சாளுக்கியா எக்ஸ்பிரஸ் (11021) டிசம்பர் 7ம் தேதி முதல் புதிய மார்க்கமான சேலம்-நாமக்கல்-கரூர் வழியே செல்கிறது. இந்த 2 ரயில்களிலும் ஈரோடு செல்லாமல் நாமக்கல் வழியே சேலத்திற்கு வந்து செல்வதால் சுமார் 1 மணி நேரம் மிச்சமாகிறது. இதனால், தென் மாவட்டங்களில் இருந்து நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு வரும் பயணிகள், வழித்தட மாற்றத்தை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


Tags : Tirunelveli ,Mumbai ,Nagercoil ,route ,Erode ,Namakkal ,Mumbai Express Train Run , Erode, Nagercoil-Mumbai, Tirunelveli-Mumbai Express, Namakkal
× RELATED ஏன் ? எதற்கு ? எப்படி ?