×

மகாராஷ்டிரா முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு அழைப்பு

மும்பை: மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே பதிவியேற்கும் விழாவில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே நாளை பதவியேற்கிறார். மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி பூங்காவில் நாளை மாலை பதவியேற்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பாட்னவிசும், துணை முதல்வர் அஜித் பவாரும் ராஜினாமா செய்தனர். இதனை தொடர்ந்து சிவசேனா தேசியவாத காங்கிரஸ்  மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து ஆளுநர் பகத்சிங் கோஷாரியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். தங்களுக்கு ஆதரவாக உள்ள 166 எம்எல்ஏக்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் அவர்கள் அளித்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் உத்தவ் தாக்கரேவை முதல்வராக பதவியேற்க அழைப்பு விடுத்தார். 28ம் தேதி மாலை 6.40 மணிக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதாகவும் கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் எம்எல்ஏ-க்கள் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. 3 கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதற்கான தீர்மானம் முதலில் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டணிக்கு மகா விகாஸ் அகாதி என பெயரிடப்பட்டுள்ளது. அடுத்து சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே- வை முதலமைச்சராக தேர்வு செய்வதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு 3 கட்சிகளின் எம்எல்ஏக்களும் ஒரு மனதாக ஆதரவு தெரிவித்தனர். கூட்டணி கட்சியினர் முன்னிலையில் பேசிய உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதலமைச்சர் ஆவேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை என்றும், இத்தகைய வாய்ப்பு கிடைக்க உதவிய காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்டோருக்கு நன்றி எனவும் தெரிவித்தார்.

30 ஆண்டுகளாக தங்களுடன்  நண்பர்களாக இருந்தவர்கள் தங்களை நம்பவில்லை என்றும், ஆனால் 30 ஆண்டுகளாக எதிரணியில் இருந்தவர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைத்தனர் என்றும் அவர் கூறினார். முதல்வராக பதவியேற்றபின் டெல்லி சென்று தனது மூத்த சகோதரரை போன்ற பிரதமர் மோடியை சந்திக்க போவதாகவும் கூறியுள்ளார். இதனிடையே, துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை தனது இல்லத்தில் சந்தித்தார். இதையடுத்து அஜித்பவாரை மன்னித்து விட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள் கேட்டுக்கொண்டனர். இந்த நிலையில், நாளை உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்ள திமுக அத்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Tags : MK Stalin ,DMK ,chief minister ,Maharashtra ,swearing-in , Maharashtra Chief Minister, Uttav Thackeray, MK Stalin, Call
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...