×

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அடுத்தடுத்து 3 வெடிகுண்டு தாக்குதல் : 6 பேர் உயிரிழப்பு : பலர் கவலைக்கிடம்

பாக்தாத் : ஈராக்கில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட 3 வெடிகுண்டு தாக்குதல்களால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. பாக்தாத் நகரில் உள்ள அல்-ஷாப், பாலாடியட், பேயா ஆகிய பகுதிகளில் தான் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது. மக்கள் அதிக நடமாட்டம் இருக்கும் இடங்களில் நிறுத்தப்பட்டு இருந்த வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனங்கள் வெடித்து சிதறின. பாக்தாத் நகரின் வடக்கே உள்ள அல்-ஷாப் பகுதியில், மோட்டார் சைக்கிள் வெடித்ததில் மூன்று பேர் உயிரிழந்ததாகவும் ஐந்து பேர் காயமடைந்ததாகவும்  ஈராக் பாதுகாப்பு மற்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

அதே போல, பாக்தாத்  நகரில் தென்மேற்கு பகுதியில் உள்ள பயா மாவட்டத்தில் இரண்டாவது மோட்டார் சைக்கிள் வெடித்ததில் இருவர் கொல்லப்பட்டனர். மேலும் இந்த தாக்குதலில் 6 பேர் காயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து பாக்தாத் நகரின் கிழக்கே உள்ள பாலடியத் மாவட்டத்தில் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனம் வெடித்து ஒருவர் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் காயமடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.  தொடர் வெடிகுண்டு தாக்குதல்களுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. குண்டுவெடிப்பு குறித்து பாக்தாத் நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Baghdad ,Iraq ,capital , Anxiety, Death, Iraq, Bomb, Baghdad, Al-Shab, Paladiad, Baia
× RELATED ஆந்திர மாநிலத்தில் அமராவதி சட்டமன்ற...