சென்னை: சிதம்பரம் கோயிலுக்கு வந்த பெண்ணை தாக்கிய வழக்கில் முன்ஜாமின் கோரி தீட்சிதர் தர்ஷன் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். முன்ஜாமின் கோரி தீட்சதர் தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தீட்சிதர் தாக்கல் செய்துள்ள ஜாமின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த 16ம் தேதி சிதம்பரம் நடராஜர் கோயிலில் விநாயகர் சன்னதியில் அர்ச்சனை செய்ய வந்த பெண்ணை தீட்சிதர் தர்ஷன் தாக்கியதாக புகார் எழுந்தது. கோயில் நடை அடைக்கும் நேரத்தில் வந்து பூஜை செய்ய வேண்டும் என்று அந்த பெண் தகராறு செய்ததாக தீட்சிதர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். தகராறு செய்த பெண் தன்னை நோக்கி கையை தூக்கியதால், தான் தற்காப்புக்காக தள்ளிவிட்டேன் என தீட்சிதர் தர்ஷன் மனுவில் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வஉசி தெருவை சேர்ந்த லதா என்ற பெண் கடந்த சனிக்கிழமை அன்று சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்பொழுது, முக்குறுணி விநாயகர் சன்னதியில் பூஜையில் இருந்த தீட்சிதர் தர்ஷன் என்பவர் லதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கணத்தில் அறைந்து தாக்கியதாக கூறப்பட்டது. இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடயே, தீட்சதர் தர்ஷனை இடைநீக்கம் செய்தும், அபராதம் விதித்தும் கோயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தீட்சதர் தர்ஷன் தனக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2ஆவது முறையாக மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த ஜாமின் மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தர்ஷன் தாக்கல் செய்த முதல் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.