சென்னை : இயற்கை பேரிடர்களால் அதிக பாதிக்கப்படும் இடங்கள் குறித்த விவரங்கள் தமிழக அரசிடம் இல்லை என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. கஜா புயல் தாக்கி ஓர் ஆண்டு கடந்து விட்ட நிலையில், பாதிப்புகள் குறித்த ஆய்வறிக்கையை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மத்திய, மாநில அரசுக்கு வழங்கியுள்ளது. பேரிடர்கள் ஏற்படும் போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகம் பாதிக்கப்படும் இடங்கள் குறித்த தகவல்கள் அரசிடம் முழுமையாக இல்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாவட்டந்தோறும் அந்த தகவல்களை திரட்ட முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் தாக்கிய பின்னர் மக்களை பாதுகாப்பாக வைப்பதற்கான இடங்கள் குறித்த முழுமையான தகவல்களை தயார் செய்து வைத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அடிக்கடி புயலால் பாதிக்கப்படும் இடங்களை கண்டறிந்து புயலின் வேகத்தை குறைக்கும் மரங்களை அங்கு நட வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயலின் 3,31,772 மின் கம்பங்கள் சாய்ந்துள்ளது. ஆகவே வரும் காலங்களில் புதைவட மின்கம்பிகள் பதிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடற்கரையில் ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டும், பேரிடர் மீட்புப் பணிகளில் ஈடுபடும் துறை அதிகாரிகளுக்கு அடிக்கடி ஆய்வு கூட்டங்கள் பயிற்சி வகுப்புகள் நடத்திடவும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி ‘கஜா’ புயல் தாக்கியது குறிப்பிடத்தக்கது.