புதுடெல்லி: ‘அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை,’ என சன்னி வக்பு வாரியம் முடிவு செய்துள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் கடந்த 9ம் தேதி தீர்ப்பளித்தது. அதே சமயம், அயோத்தியில் மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை மத்திய, உபி மாநில அரசுகள் தேர்வு செய்து வழங்கவும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை ஏற்பதா, அரசு தரும் நிலத்தை பெற்றுக் கொள்வதா என்பது குறித்து முஸ்லிம் அமைப்புகள் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.
அயோத்தி தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சன்னி வக்பு வாரியத்தின் உயர்மட்ட உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த அமைப்பே, அயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்பின் முக்கிய மனுதாரர்.
வாரிய தலைவர் ஜூபர் பரூக் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், அயோத்தி தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பரூக் கூறுகையில், ‘‘கூட்டத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்வதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். அரசு தரும் 5 ஏக்கர் நிலத்தை ஏற்பதா? வேண்டாமா? என்பது குறித்து கருத்து தெரிவிக்க உறுப்பினர்கள் கால அவகாசம் கேட்டுள்ளனர்’’ என்றார்.