இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவ தளபதி உமர் ஜாவித் பஜ்வாவின் பதவிக் காலம் வரும் 29ம் தேதியுடன் முடிகிறது. இதனையொட்டி அவரது பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்து பிரதமர் இம்ரான் கான் கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து ரைஜ் ரகி என்பவர் இந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தலைமை நீதிபதி அசிப் சயீத் கோசா, பொதுநலன் கருதி மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்டார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி, ராணுவ தளபதியின் பதவியை நீட்டிக்கும் அதிகாரம் அதிபருக்கு மட்டுமே உள்ளது. அது மட்டுமில்லாமல் அமைச்சரவை கூட்டத்தில் 25 உறுப்பினர்களில் 11 பேர் மட்டுமே இதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். எனவே, ராணுவ தளபதியின் பதவி நீட்டிப்பிற்கான பிரதமரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அடுத்த விசாரணை புதன்கிழமை (இன்று) நடைபெறும்,’’ என்று தெரிவித்தார். இதையடுத்து, இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.