புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் அங்கிருந்தபடியே அலுவலக கோப்புகளை பார்வையிட்டு கையொப்பமிட்டு வருவதாகவும் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரி முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 25ம் தேதி மூட்டுவலி காரணமாக, சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் நாராயணசாமிக்கு, மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் கணுக்காலில் சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப்பின் தற்போது முதல்வரின் உடல்நிலை சீராக உள்ளது.
இதையடுத்து முதல்வர் நேற்று, அலுவலக கோப்புகளை பார்வையிட்டு கையொப்பமிட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளதால், ஓரிரு தினங்களில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது பூரண ஓய்வில் இருக்க வேண்டியுள்ளதாலும், விரைவில் மருத்துவமனையிலிருந்து புதுச்சேரி திரும்ப உள்ளதாலும், அவரை காண யாரும் சென்னைக்குச் செல்ல வேண்டாமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தன்னுடைய நலன் குறித்து அன்புடன் விசாரித்த அனைவருக்கும் முதல்வர் நாராயணசாமி தன்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.