குன்னூர்: குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் பாதையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் பாதையில் ராட்சத பாறைகள் விழுந்தன. 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவுவும் ஏற்பட்டது. இதனால் ரயில் தண்டவாளம் பல இடங்களில் சேதமடைந்துள்ளது. இதனால் கடந்த 15ம் தேதி முதல் குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. ரயில்வே பணியாளர்கள் மலை ரயில்பாதையை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தண்டவாளங்களை உடனடியாக சீரமைக்க முடியாது என்பதால் வரும் 29ம் தேதி வரை மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் குன்னூர் வரை பஸ்சில் வந்து அங்கிருந்து ஊட்டிக்கு இயக்கப்படும் மலை ரயிலில் பயணித்து வருகின்றனர். தற்போது குன்னூர் முதல் காட்டேரி, ரண்ணிமேடு, ஹில்க்ரோ உள்ளிட்ட பகுதிகளில் தண்டவாளம் சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சிறிய அளவிலான ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் தண்டவாளத்தில் விழுந்த பாறைகள் மற்றும் மண் ஆகியவற்றை அகற்றி வருகின்றனர். இதனால் 30ம் தேதி முதல் குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் மீண்டும் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.