மார்த்தாண்டம்: குமரி மாவட்டத்தை கேரளத்தோடு இணைக்கும் முக்கிய சாலையாக என்எச் 47 உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில், குழித்துறை தாமிரபரணி ஆற்றின் குறுக்காக பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் இரவை பகலாக்கும் வகையில் 42 மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. ஆனால் தரமற்ற வகையில் கம்பங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆகவே நாளடைவில் பல மின்கம்பங்கள் துருப்பிடித்து பழுதடைந்தன. இதே போல் மின்விளக்குகள் பல எரியாமல் இருள் சூழ்ந்ததால் பல சமூக விரோத செயல்கள் நடந்து வந்தன. இருளை பயன்படுத்தி பாலப்பகுதிகளில் கழிவுகளை கொட்டி செல்வோரும் அதிகரித்து வந்தனர். இதனால் இந்த பகுதி துற்நாற்றம் வீசி வந்தது. பொது மக்கள் நலன் கருதி மின்விளக்குகளை உடனடியாக சீரமைத்து இயங்க செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மின்விளக்குகள் சீரமைக்கப்பட்டன.
இந்த பாலம் வழியாக கேரள மாநிலத்திற்கும் சென்று வரும் பல வாகனங்கள் இயங்குகின்றன. தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ள நிலையில் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களும் அதிகம் சென்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக குழித்துறை பாலத்தில் உள்ள மின்விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. எனவே பொதுமக்கள் நலன்கருதி மின்விளக்குகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் இதுகுறித்து குழித்துறை நகராட்சி ஆணையருக்கு மார்த்தாண்டம் வர்த்தக சங்க தலைவர் தினகர் கோரிக்கை மனுவும் அளித்துள்ளார்.