×

ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகம் அருகே கையெறி குண்டு வீசி தீவிரவாதிகள் தாக்குதல்: 3 பேர் படுகாயம்

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகம் அருகே தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 3 பேர் காயமடைந்துள்ளனர். மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீர், ஜம்மு, லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இந்த அறிவிப்பு கடந்த அக்டோபர் 31ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. அதாவது, ஜம்மு, லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் அன்று முதல் செயல்பட தொடங்கின. மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றுவதன் மூலம், ஆட்சி நிர்வாகத்தை தமது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும் எனவும், அதன் மூலம் பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டலாம் என்பது மத்திய அரசின் நோக்கம். தமது இந்த நோக்கத்தில் வெற்றிப் பெற, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு தான் வருகிறது. இருப்பினும், ஜம்மு -காஷ்மீரில் சமீப காலமாக அவ்வப்போது பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்று தான் வருகிறது.

அந்த வகையில், ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் நுழைவாயில் ஒன்றுக்கு அருகில், தீவிரவாதிகள் கையெறிக் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரின் ஹஸ்ரத்பல் பகுதியில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் சர் சய்யத் நுழைவாயிலுக்கு அருகே வாகனம் நிறுத்தும் பகுதியில் மக்கள் நின்றிருந்த போது இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாகும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். ஆங்காங்கே வெடிகுண்டுகள் வெடிக்க வாய்ப்புள்ளதாக உள்ளூர் மக்களுக்கு ஜம்மூ-காஷ்மீர் போலீசார் நேற்று எச்சரிக்கை விடுத்த நிலையில், இன்று இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Terrorists ,Srinagar Grenade Attack Near Kashmir University ,Kashmir University , Srinagar, Kashmir, University, grenade,attack
× RELATED 133 பேர் பலியான மாஸ்கோ தாக்குதல்...