ஸ்ரீநகர்: காஷ்மீரில் நேற்று மாலை பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். மேலும் 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். புல்வாமா மாவட்டத்தின் டிராப்காம் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். இந்நிலையில் அனந்தநாக் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் சிக்கின. இந்நிலையில் பாரமுல்லா மாவட்டத்தில் கையெறி குண்டுகளுடன் சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதத்தில் நின்று கொண்டிருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் நேற்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டம் டஸ்வாரா கிரமத்தில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். ஆனால் மற்றுமொரு பயங்கரவாதி அங்கிருந்து தப்பிச்சென்று விட்டான். இதையடுத்து, அப்பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள பாதுகாப்பு படையினர் தப்பிச்சென்ற பயங்கரவாதிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.