×

ஐஆர்சிடிசியில் ரயில் டிக்கெட் ஆன்லைன் முன்பதிவுக்கான சேவை கட்டணம் வசூல் எதிரொலி: முன்பதிவு மையங்களில் 30% கூட்டம் அதிகரிப்பு

சென்னை: ஐஆர்சிடிசியில் ரயில் டிக்கெட் ஆன்லைன் முன்பதிவுக்கான சேவை கட்டணம் மீண்டும் வசூலிக்கப்படுகிறது. இதனால், டிக்கெட் முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. 2016-ம் ஆண்டில் கொண்டுவரப் பட்ட பண மதிப்பு நீக்க  
நடவடிக்கைக்குப் பிறகு பொதுமக்களை மின்னணு பரிமாற்றத்துக்கு ஊக்குவிக்கும் வகையில் ஆன்லைனில் பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்களுக்கு சேவை கட்டணம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கையும் 73 சதவீதமாக அதிகரித்தது.

டிக்கெட் ஒன்றுக்கு 5% ஜிஎஸ்டியுடன் வசூல்

இந்த சேவை கட்டணம் ரத்தால் ரயில்வே துறைக்கு ஆண்டுதோறும் ரூ.500 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகவும், இந்தத் தொகையை மத் திய அரசு அளிக்க வேண்டுமென்றும் நிதி அமைச்சகத்திடம் ரயில்வே துறை பல முறை வலியுறுத்தி வந்தது. இதற்கிடையே, டிக்கெட் முன் பதிவுக்கான சேவை கட்டணம் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் மீண்டும் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆன்லைனில் முன்பதிவு செய்ய ஏசி அல்லாத டிக்கெட் ஒன்றுக்கு ரூ.15 மற்றும் 5 சதவீதம் ஜிஎஸ்டி, ஏசி டிக்கெட் ஒன்றுக்கு ரூ.30 மற்றும் 5 சதவீத ஜிஎஸ்டியுடன் வசூலிக்கப்படுகிறது. இதனால், டிக்கெட் முன்பதிவு செய்ய முன்பதிவு மையங்களுக்கே பயணிகள் மீண்டும் செல்லத் தொடங்கிவிட்டனர். இதன் காரணமாக சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

பெரும்பாலான முன்பதிவு மையங்களில் 30% வரை கூட்டம்

இதுதொடர்பாக டிக்கெட் முன் பதிவு பிரிவு அதிகாரிகளிடம் கேட்ட போது, மீண்டும் சேவை கட்டணம் வசூலிக்கப்படுவதால், முன் பதிவு மையங்களுக்கு பயணிகள் வரத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக, சென்னை சென்ட்ரல், எழும்பூர், மாம்பலம், தாம்பரம், பரங்கிமலை உள்ளிட்ட பெரும்பாலான முன்பதிவு மையங்களில் 30 சதவீதம் வரை கூட்டம் அதிகரித்துள்ளது என்றனர். இதுகுறித்து பயணிகள் சிவக்குமார், சந்திரசேகர் ஆகியோர் கூறும்போது, ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்யும்போது ஒரு டிக்கெட்டுக்கு ரூ.20 (சிலீப்பர் வகுப்பு) முதல் ரூ.40 (ஏ.சி வகுப்பு) வரை வசூலிக்கப்படுகிறது. ஒரு டிக்கெட் வாங்கினால் கூட இதே கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது. எனவே முன்பதிவு மையங்களில் டிக்கெட் முன்பதிவு செய்கிறோம். பயணிகள் நலன் கருதி சேவை கட்டணத்தை குறைக்க ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

2016-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட சேவைக் கட்டணம் மீண்டும் அமல்

ஐஆர்சிடிசி உயர் அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, 2016 நவம்பரில் ரத்து செய்யப் பட்ட சேவைக் கட்டணம் கடந்த செப்டம்பர் மாதத்தில்தான் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.500 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். ஐஆர்சிடிசியின் சேவைகளை மேம்படுத்த இந்த நிதியைப் பயன்படுத்த உள்ளோம். எனவே, சேவைக் கட்டணத்தை குறைக்க தற்போது வாய்ப்பு இல்லை. இருப்பினும், மத்திய அரசு தலையிட்டு எங்களுக்கு மானியத் தொகை அளித்தால் சேவை கட்டணத்தை குறைக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.

Tags : Booking ,Booking Centers ,IRCTC , 30% , booking centers,re-charge,train ticket ,online booking,IRCTC
× RELATED ரயில் பயணிகளுக்கு மலிவு விலை உணவு...