கொச்சி: சபரிமலை செல்வதற்காக கொச்சி வந்த கேரள பெண் பிந்து மீது மிளகாய் பொடி ஸ்பிரே அடிக்கப்பட்டாதால் பரபரப்பு ஏற்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
ஆனால், சபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க மாட்டோம் என்று கேரள அரசு தெரிவித்தது. நீதிமன்ற அனுமதியுடன் வரும் பெண்களுக்கு மட்டும் தான் பாதுகாப்பு தர முடியும், அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க முடியாது எனவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. ஆனால் சபரிமலை செல்ல முயற்சித்த சில பெண்களை, கேரள போலீசார் தடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பி அனுப்பினர். இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் கேரளா வந்துள்ளார். திருப்தி தேசாய், பிந்து உள்பட7 பேர் கொண்ட குழு இன்று அதிகாலை கொச்சி விமான நிலையம் வந்தது. அவர்கள் கோட்டயம் வழியாக சபரிமலை செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும், சபரிமலை செல்ல பாதுகாப்பு அளிக்கக் கோரி கொச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் திருப்தி தேசாய் உள்ளிட்ட 7 பேர் மனு அளித்துள்ளனர். ஆனால் அய்யப்பன் கோயிலுக்கு செல்ல தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டால் நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் திருப்தி தேசாய் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திருப்தி தேசாயுடன் காவல் ஆணையர் அலுவகம் வந்த பிந்து மீது மிளகாய் பொடி ஸ்பிரே தாக்குதல் நடத்தப்பட்டது.