கோமா: காங்கோ நாட்டில் குடியிருப்பின் மீது சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் பொதுமக்கள் 29 பேர் உயிரிழந்தனர். மத்திய ஆப்ரிக்க நாடான கிழக்கு ஜனநாயக குடியரசு காங்கோவில் கோமா என்ற நகரம் உள்ளது. இங்குள்ள விமான நிலையத்தில் இருந்து பிஸி பீ என்ற விமான நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் சுமார் 350 கி.மீ. தொலைவில் உள்ள பெனி நகருக்கு புறப்பட்டு சென்றது.
இந்த விமானத்தில் 17 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்கள் என 19 பேர் இருந்தனர். காலை 9 மணிக்கு விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அதில் கோளாறு ஏற்பட்டு விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் அங்கிருந்த வீடுகள் இடிந்து சேதமடைந்தது.
இதில் இடிபாடுகளில் வீடுகளில் இருந்த பலர் சிக்கினார்கள். விபத்தில், பயணிகள், விமான ஊழியர்கள் 19 பேர் உட்பட 29 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.