சென்னை: கோயிலுக்கு வந்த பெண்ணை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் சிதம்பரம் தீட்சிதரின் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 16ம் தேதி இரவு முக்குருணி விநாயகர் சன்னதியில் அர்ச்சனை செய்ய கோரிய பெண்ணை தீட்சிதர் தாக்கிய சம்பவம் இணையதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக தீட்சிதர் நடராஜ் கணேஷ் (எ) தர்ஷன் மீது சிதம்பரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் தன்னை காவல் துறையினர் கைது செய்யக் கூடும், எனவே, முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனக்கோரி தீட்சிதர் தர்ஷன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில், மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுதள்ளுபடி செய்யப்பட்டது .