×

பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது

சென்னை: இந்தியாவிற்கு சொந்தமான கார்டோசாட்-3 மற்றும் அமெரிக்க நாட்டிற்கு சொந்தமான 13 நானோ செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் நாளை காலை 9.28 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ஜி.எஸ்.எல்.வி மற்றும் பி.எஸ்.எல்.வி வகை ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி வருகிறது. புவி கண்காணிப்பை அதிகரிக்க பி.எஸ்.எல்.வி சி-46 ராக்கெட் மூலம் ரிசாட் 2பி  செயற்கைகோளை கடந்த மே 22ம் தேதி இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதையடுத்து, பூமி ஆராய்ச்சிக்காக கார்டோசாட்-3 செயற்கைகோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டது. அதன்படி, ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து  பி.எஸ்.எல்.வி சி-47 ராக்கெட்டை திட்டமிட்டபடி நாளை காலை 9.28 மணிக்கு இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது. இந்தியாவிற்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் 3ம் தலைமுறைக்கான நவீன செயற்கை கோள் ஆகும். இது  துல்லியமாக புகைப்படங்கள் எடுத்து அனுப்பும் திறன் கொண்டது.

மேலும், இந்த செயற்கைகோள் பெரிய அளவிலான நகர பயன்பாட்டு திட்டம், கடற்கரையோர நிலங்களின் பயன்பாடு உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படும். கார்டோசாட்-3 செயற்கைகோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள். கார்டோசாட்-3  செயற்கைகோள் பூமியிலிருந்து 509 கி.மீட்டர் தொலைவில் அதன் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இதற்கான இறுதிகட்டப் பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் முடித்துள்ளனர். கார்டோசாட்-3 செயற்கைகோளுடன் இணைந்து வணிக ரீதியாக அமெரிக்க நாட்டிற்கு சொந்தமான 13 ‘நானோ’ வகை செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்பட  உள்ளன. பி.எஸ்.எல்.வி சி-47 ராக்கெட் 2019ம் ஆண்டில் செலுத்தப்படும் 5வது ராக்கெட் ஆகும்.கார்டோசாட்-3 செயற்கைகோளுடன் இணைந்து வணிக ரீதியாக அமெரிக்க நாட்டிற்கு சொந்தமான 13 ‘நானோ’ வகை செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்பட உள்ளன

Tags : PSLV ,BSLV C-47 Rocket Tomorrow , BSLV, C-47, Rocket,sky
× RELATED பிஎஸ்எல்வி ராக்கெட்டை...