சென்னை: குரூப் 4 பதவி தேர்வு எழுதியவர்களுக்கு ஜாக்பாட் அடிக்கும் வகையில் காலி பணியிடங்களுக்கான எண்ணிக்கை 6491லிருந்து 9398 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப்பணியளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் நந்தகுமார் வெளியிட்ட அறிவிப்பு:தமிழ்நாடு அரசுப்பணியளர் தேர்வாணையம் குரூப் 4 (2018-19, 2019-20ம் ஆண்டுக்கானது) பதவியில் காலியாக உள்ள 6491 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை கடந்த செப்டம்பர் 1ம் தேதி மாநிலம் முழுவதும் நடத்தியது. இதன் தேர்வு முடிவுகள், அதாவது தேர்வு எழுதியவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அவர்களது தரவரிசை ஆகியவை கடந்த 12ம் தேதி வெளியிடப்பட்டது.
இதனிடையே, 2018-19 மற்றும் 2019-20 ஆண்டுகளுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 6491லிருந்து 9398 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, கிராம நிர்வாக அலுவலர் பதவிகள் 397லிருந்து 607 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) 2688, இளநிலை உதவியாளர் (பிணையம்) 104, வரித்தண்டலர் (கிரேடு 1) 34 என 4558 ஆக அதிகரித்துள்ளது. தட்டச்சர் 1901லிருந்து 2734, சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு 3) 784லிருந்து 994, நில அளவர் 509லிருந்து 505 ஆக்கப்பட்டுள்ளது. வரைவாளரில் 74 பணியிடங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. தற்போது அதிகரிக்கப்பட்ட காலிப்பணியிடங்களும் கணக்கில் கொள்ளப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு என தேர்வு செய்யப்பட உள்ள தகுதியானவர்களின் பட்டியல் விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.குரூப் 4 காலி பணியிடங்களுக்கான எண்ணிக்கையை டிஎன்பிஎஸ்சி அதிகரித்துள்ளது தேர்வு எழுதியவர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.