மும்பை : மராட்டிய துணை முதல்வர் அஜித் பவார் மீதான நீர்ப்பாசன ஊழல் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அஜித் பவார் மீதான புகாரில் எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி காவல்துறை வழக்கை முடித்து வைத்தது. மராட்டியத்தில் பாஜக ஆட்சி அமைக்க அஜித்பவார் உதவிய 48 மணி நேரத்தில் அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது. மகாராஷ்டிராவில் பெரும் சர்ச்சைகளுக்கு இடையே முதல்வராக பட்னாவிஸ், துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றுள்ளனர். மேலும் இப்புதிய அரசுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க இருக்கிறது.
அஜித் பவார் மீதான நீர்ப்பாசன ஊழல் வழக்கு
மராட்டிய மாநிலத்தில் காங்., மற்றும் தேசியவாத காங்., கூட்டணி அரசு அமைந்திருந்தபோது, அமைச்சர் மற்றும் துணை முதல்வராக அஜித் பவார் இருந்தார். கடந்த, 2000 - 2014 காலகட்டத்தில், பாசன திட்டத்தில், 70 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அவர் மீது புகார் எழுந்தது. மேலும், பாசனத்துக்கான நீரை, தொழில் நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பியதாகவும் அவர் மீது புகார் உள்ளது.பாசன திட்ட மோசடி தொடர்பாக, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில், மாநில அரசு சார்பில், கடந்தாண்டு நவம்பரில், அஜித் பவாருக்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு முடித்துவைப்பு
இந்நிலையில் இன்று அஜித் பவார் மீது முந்தைய பாஜக ஆட்சியில் தொடரப்பட்ட ரூ70,000 கோடி நீர்ப்பாசன திட்ட ஊழல் வழக்கு இன்று அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அஜித் பவார் மீதான இவ்வழக்கில் எந்த ஆதாரமும் இல்லை என கூறி போலீசார் இதனை முடித்து வைத்துள்ளனர். இதனிடையே நீர்பாசன தொடர்பான 9 வழக்குகளில் அஜித்பவாருக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என்று போலீஸ் விளக்கம் அளித்துள்ளது. நீர்ப்பாசனத் திட்டங்களில் நடந்த ஊழல் தொடர்பாக 3000க்கும் மேற்பட்ட புகார்களை விசாரித்த பிறகு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீஸ் தகவல் அளித்துள்ளது.