டெல்லி : மகாராஷ்டிரா வழக்கில் நாளை 10.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் உத்தரவை நாளை காலை 10.30க்கு ஒத்திவைத்தனர்.
*மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சராக அஜித் பவார் நவம்பர் 23-ம் தேதி காலையில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்று கொண்டனர்.
இதனை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
*இந்த மனு நீதிபதிகள் என்வி ரமணா, அசோக் பூஷன், சஞ்சீவ் கண்ணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
*அப்போது மகாராஷ்டிராவில் பாஜகவை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநரின் கடிதம் சீலிட்ட உறையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களின் கடிதங்களும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அத்துடன் 54 தேசியவாத காங். எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதம் என அஜித்பவார் ஆளுநரிடம் அளித்திருந்த கடிதங்களும் தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் நடந்த வாதங்கள் பின்வருமாறு :
மத்திய அரசு தரப்பில் துஷார் மேத்தா:
ஆளுநரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது; ஆளுநரை விரைவாக வேலை செய்யவோ, அவசரப்படுத்தவோ முடியாது. ஆதரவு கடிதங்கள் குறித்து ஆளுநர் விசாரிக்கத் தேவையில்லை. 54 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளதாக அஜித் பவார் அளித்த கடிதத்தில் உள்ளது. என்.சி.பியின் தலைவரே நான்தான் என அஜித்பவார் கடிதத்தில் கூறியுள்ளார்.சுயேட்சைகள் மற்றும் அஜித் பவார் அளித்த ஆதரவு கடிதத்தால் ஆளுநர் பட்னாவிஸை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். பல்வேறு கேள்விகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டியுள்ளதால் கூடுதல் அவகாசம் தேவை
சிவசேனா, காங்கிரஸ் சார்பில் கபில் சிபல் வாதம்:
குடியரசுத் தலைவர் ஆட்சியை அவசர அவசரமாக நீக்க இது என்ன அவசர நிலை பிரகடனமா?அவசர அவசரமாக ஆட்சியமைத்த ஃபட்னாவிஸ், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அவகாசம் கோருவதில் உள்நோக்கம் உள்ளது.தேர்தலுக்கு முந்தைய கூட்டணி உடைந்து விட்டது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமலேயே குடியரசுத்தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்டுள்ளது. அஜீத் பவார் அளித்த ஆதரவு கடிதத்தை அரையும், குறையுமாக நம்பி பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்ததன் வாயிலாக ஜனநாயக மோசடி நடைபெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரே ஒரு எம்.எல்.ஏ. பாஜகவிற்கு ஆதரவு வழங்குகிறேன் என கூறினால், அது கட்சியின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியுமா?.பாஜகவை இன்றே பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்.பெரும்பான்மை இருந்தால் சட்டப்பேரவையில் பாஜக நிரூபிக்கட்டும்.இல்லையெனில் நாங்கள் ஆட்சியமைக்க உரிமை கோருவோம்.