×

வித விதமாக வெளியிட்ட வீடியோக்களால் வில்லங்கம்: வாழ்க்கையை தொலைத்த ‘டிக்டாக்’ தோழிகள்

மதுரை: மதுரை டிக்டாக் தோழிகளை பாலியல் தொழிலாளிகளாக சித்தரித்து, அவர்களது வாழ்க்கையை நாசமாக்கிய தேனியை சேர்ந்த பெண், அவரது ஆண் நண்பர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதுரையை அடுத்த ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ராணி. இவரது தோழி கலா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). டிக்டாக் செயலிக்கு அடிமையான இருவரும், அவ்வப்போது நகைச்சுவை, பொழுதுபோக்கு என வித, விதமாக வீடியோக்களை பதிவிட்டு வந்தனர். லைக்குகளுக்கு ஆசைப்பட்டு இருவரும் தங்களுடைய வீடியோக்களை டிக்டாக்கில் தாராளமாக பதிவிட்டது விபரீதத்தில் முடிந்துள்ளது.

கலாவிற்கு, தேனியை சேர்ந்த சுகந்தி என்ற பெண்ணுடன் டிக்டாக் மூலம் நட்பு ஏற்பட்டது. சுகந்தி தனது ஆண் நண்பருடன் செய்யும் காதல் சேட்டைகளை எல்லாம் டிக்டாக்கில் கலா பதிவிட்டுள்ளார். இதனால் சுகந்தி, கலா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நட்பை துண்டித்துக்கொண்டனர். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சுகந்தி, தனது ஆண் நண்பர் செல்வாவுடன் சேர்ந்து கலா மற்றும் ராணி ஆகியோரின் டிக்டாக் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து, இருவரையும் பாலியல் தொழிலாளிகள் போல் சித்தரித்து டிக்டாக் செயலியில் வீடியோ பதிவிட்டார்.

இதனால் நடத்தையில் சந்தேகப்பட்டு ராணியின் கணவர், அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டார். தற்போது அவர் காப்பகத்தில் தங்கியுள்ளார். பாலியல் தொழிலாளர்கள் போன்று சித்தரித்து டிக்டாக்கில் பதிவிட்ட சுகந்தி, செல்வா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஒத்தக்கடை போலீசில் கலாவும், மதுரை போலீஸ் கமிஷனரிடம் ராணியும் புகார் அளித்தனர். இதையடுத்து சுகந்தி மற்றும் செல்வா மீது ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

8 மாதமாக டார்ச்சர்

கலா மற்றும் ராணி ஆகியோர் கூறும்போது, ‘‘நாங்கள் இணைந்து டிக்டாக்கை பாதுகாப்பாக பயன்படுத்தி வந்தோம். இதில் இவ்வளவு பிரச்னை இருக்கும் என்பது எங்களுக்கு தெரியவில்லை. இதனால் மன உளைச்சல் தான் அதிகமாக உள்ளது. குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு விவாகரத்து அளவிற்கு வந்துள்ளது. எங்களைப்போன்று எந்த பெண்ணும் டிக்டாக் பயன்படுத்தி பாதிக்கப்படக்கூடாது. டிக்டாக்கில் அதிக பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் வெளியில் சொல்லாமல் உள்ளனர். டிக்டாக்கில் இருந்து வெளியே வந்ததால் எங்களை 8 மாதமாக சுகந்தி, செல்வா ஆகியோர் டார்ச்சர் செய்து வந்தனர். இவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : guys ,Villongkam ,Digtag , tiktok
× RELATED திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக...