புதுடெல்லி: மத்திய அரசு நிறைவேற்றவுள்ள அணை பாதுகாப்பு மசோதாவுக்கு தடை விதிக்கக் கோரி டெல்லியில் மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சரை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசு கொண்டு வர உள்ள அணை பாதுகாப்பு மசோதாவுக்கு தமிழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும், இந்த மசோதாவால் தமிழகம் மிகவும் பாதிக்கும் என தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த மசோதா மூலம் தமிழகம் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக எங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளதாக அவர் கூறினார். தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடிய 5 அணைகளுக்கு மட்டும் விதிவிலக்கு கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். தமிழகம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
அதேபோல, மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது தொடர்பாக மத்திய அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியாக கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக நடுவர் நீதிமன்றம் விசாரிக்கும் எனவும், அதில் தமிழக அரசு சார்பில் முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, முல்லை பெரியாறு அணை குறித்து செய்தியாளர் தரப்பில் இருந்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அனைத்து நதி பிரச்சனைகளை பற்றி பேச இங்கு வரவில்லை. தற்போது, மத்திய அரசு கொண்டுவரப்போகும் அணை பாதுக்காப்பு மசோதாவில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி வரியால் தமிழகம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.