×

சென்ட்ரல்-ஜெய்ப்பூர் ரயிலில் இரு பயணிகளிடம் வழிப்பறி செய்த 4 பேர் அதிரடி கைது: 8 சவரன் நகை பறிமுதல்

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஜெய்பூருக்கு கடந்த 19ம் தேதி மாலை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. பேசின்பிரிட்ஜ் இடையே மெதுவாக சென்றபோது 4 பேர் கும்பல் ரயிலில் ஏறி பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி ₹20 ஆயிரம், மோதிரம், 3 செல்போன் மற்றும் 2 பேரிடம் 6 சவரன் நகையை பறித்துக் கொண்டு அபாய சங்கிலியை இழுத்து தப்பி சென்றனர்.அதே நாளில் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி சென்ற மின்சார ரயிலிலும் கொள்ளை நடந்துள்ளது. தண்டையார்பேட்டையில் ரயில் வந்தபோது கத்தியை காட்டி மிரட்டி பயணிகளிடம் செல்போன், ₹5000 பணத்தை 4 பேர் கும்பல் பறித்து சென்றது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளை கும்பலை தேடி வந்தனர்.

இந்நிலையில் ரயிலில் கொள்ளையடித்தவர்கள் கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து டிஜிபி சைலேந்திரபாபு, ஐஜி வனிதா உத்தரவின்பேரில் டிஎஸ்பி முருகன், இன்ஸ்ெபக்டர் சசிகலா தலைமையில் அங்கு சென்று, காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த அருண் (எ) அருள்ராஜ் (25), மோகன்சந்த் (22), ராஜா (21), சரண் (எ) விக்கி (21) ஆகிய 4 பேரை போலீசார்  கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 8 சவரன் நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். அதைப்போல் ரயிலிலில் வரும் பயணிகள் தூங்கும் போது அவர்களிடம் இருந்து நகை, பணத்தை கொள்ளையடித்த ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த மோனிஷா (23) என்பவரையும் கைது செய்து அவரிடமிருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது.



Tags : Central ,Jaipur , Fou,arrested, Central-Jaipur, train
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...