×

2 வயதில் டென்மார்க் தம்பதிக்கு தத்துக்கொடுப்பு 41 ஆண்டுகள் கழித்து தாயை சந்தித்த மகன்

திருவொற்றியூர்: இரண்டு வயதில் தாயை பிரிந்து சென்ற மகன்  41 வருடங்களுக்கு பிறகு தனியார் தொண்டு நிறுவனத்தின் துணையோடு 6 ஆண்டுகள் தேடி தாயை கண்டுபிடித்தார். மணலியில் வசித்து வரும் தனலட்சுமிக்கு ராஜன், டேவிட் என்ற 2 மகன்கள். இதில் 2வது மகன் டேவிட் கடந்த 1976ம் ஆண்டு  பிறந்து உள்ளார்.  டேவிட்டிற்கு 2 வயது இருந்தபோது தனலட்சுமி குடும்பம் வறுமையில் வாடியது. அப்போது பல்லாவரத்தில் தங்கியிருந்த தனலட்சுமி வறுமை காரணமாக அதே பகுதி தனியார் காப்பகத்தில்  சில மாதம் தங்கியிருந்தார். காப்பக குழந்தைகள் பெற்றோர் இல்லாமல் இருந்ததால் தனலட்சுமி தனது இரு குழந்தைகளுடன் இருந்தால் மற்ற குழந்தைகளுக்கு ஏக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதிய காப்பக நிர்வாகம் ராஜன், டேவிட்டை காப்பகத்தில் விட்டு விட்டு தனலட்சுமியை வெளியே தங்கி இருக்குமாறு கூறியது.

இதனால் 2 குழந்தைகளையும் விட்டுவிட்டு சென்ற தனலட்சுமி வெளியே தங்கினார். பின்னர், அவ்வப்போது வந்து குழந்தைகள் பார்த்துவிட்டு சென்றார். இந்நிலையில் ஒருநாள் தனலட்சுமி குழந்தைகளை பார்க்க வந்தபோது, இரண்டு மகன்களும் காப்பகத்தில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்து காப்பகத்தில் கேட்டார். அப்போது 2 குழந்தைகளையும் டென்மார்க்கை சேர்ந்த  இரண்டு தம்பதிகள் தத்து எடுத்துக்கொண்டு சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் குழந்தைகள் நன்றாக இருக்கட்டும் என்ற எண்ணத்தில் இருந்து விட்டார். பின்னர் மகன்  டேவிட்டை தத்தெடுத்துக்கொண்டு சென்ற டென்மார்க் தம்பதியினர் டேவிட்டின் புகைப்படத்தை சில நாட்களில் தனலட்சுமிக்கு அனுப்பி உள்ளனர். அந்த புகைப்படத்தை மட்டுமே தனலட்சுமி கையில் வைத்திருந்தார். இந்நிலையில் டென்மார்க்கில் டேவிட்  பெரியவனானதும் கடந்த 2013ம் ஆண்டு தாயை தேடி தமிழ்நாட்டிற்கு வந்தார். தஞ்சாவூர், திருநெல்வேலி மதுரை போன்ற  பல இடங்களில் அலைந்திருக்கிறார். தாயின் விவரம் தெரியாததால் சிறுவயதில் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தாயை கண்டுபிடிக்க உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் புகைப்படத்தை தனியார் தொண்டு  நிறுவனத்தை சேர்ந்த அருண்டோலே என்பவரிடம் கொடுத்து தாயை கண்டுபிடித்து தருமாறு கூறி இருக்கிறார். இறுதியில் டேவிட்டின் தாய் தனலட்சுமி மணலியில் ஒரு சிறு வீட்டில் இளைய மகன் சரவணன் என்பவருடன் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் தாயிடம் முதன்முறையாக வீடியோகால் மூலம் டேவிட் பேசியிருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தாய் குடியிருக்கும்  மணலிக்கு வந்தார் டேவிட். அங்கே தாயின் வீட்டிற்கு சென்ற  டேவிட்டை தாய் தனலட்சுமி மிகுந்த உணர்ச்சி மிகுதியால் கட்டித்தழுவி கண்ணீர் விட்டார். 41 ஆண்டுகளுக்கு பிறகு தாய், மகன் ஒன்று சேர்ந்து உருக்கமாக இருந்தது பார்ப்வர்கள் அனைவரையும்  உணர்ச்சிவசப்பட வைத்தது. இரண்டு வயதில் தமிழகத்திலிருந்து தத்தெடுக்கப்பட்ட டேவிட் தற்போது டென்மார்க்கில் வசித்து வருகிறார். தமிழை முழுவதுமாக மறந்துவிட்ட டேவிட் மொழி பெயர்ப்பாளர்களின் துணையுடன் தாயிடம் பேசி வருகிறார். மேலும் தனது அண்ணன் ராஜன் டென்மார்க்கில் வாழ்ந்து வருவதாகவும் விரைவில்  அவரை கூட்டி வந்து தாயை சந்திக்க திட்டமிட்டு உள்ளதாகவும்  கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Tags : Denmark ,adoption , son ,Denmark couple , mother 41 years ,adoption
× RELATED உலகின் மகிழ்ச்சியான நாடுகளின்...