×

ஆட்டத்தை ஆரம்பித்தார் கோத்தபய இலங்கை முழுவதும் ராணுவம் குவிப்பு: தமிழ் மக்கள் கடும் பீதி

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் ராணுவ அமைச்சரும், ராஜபக்சேயின் தம்பியுமான கோத்தபய ராஜபக்சே அபார வெற்றி பெற்றார். தமிழர் பகுதிகளில் அவருக்கு சிறிதளவு கூட ஆதரவு கிடைக்கவில்லை. முழுக்க, முழுக்க சிங்களர்கள் வசிக்கும் பகுதியில்தான் கோத்தபயவுக்கு பெருவாரியான வெற்றி கிடைத்தது. தமிழ் மக்கள், சஜித் பிரேமதாசாவையே ஆதரித்தனர். இந்நிலையில், கோத்தபய அதிபராக பதவியேற்றுக் கொண்டதும், அவர் செய்த முதல் வேலையே, பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேயை பதவி விலக நெருக்கடி அளித்ததுதான். இதனால், அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து, தனது அண்ணான ராஜபக்சேயை பிரதமராக நியமித்தார். மேலும், பல்வேறு முக்கிய பதவிகளில் தனது குடும்பத்தினரை நியமித்தார். இதனால், ஒட்டு மொத்த அதிகாரமும் ராஜபக்சே குடும்பத்திடம் சென்றது.இலங்கையில் விடுதலைப் புலிகள் உடனான இறுதிக்கட்ட போரை நடத்தியது கோத்தபயவும், அப்போதைய ராணுவ அதிகாரிகளும்தான். அந்த போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ெகான்று குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இலங்கை முழுவதும் ராணுவம் ரோந்து செல்ல அதிபர் கோத்தபய உத்தரவிட்டுள்ளார். நாட்டின் பொது அமைதியை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிபர் மாளிகை கூறியுள்ளது. கச்சத்தீவிலும் ராணுவத்தினர் ரோந்தை உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் சமீபத்தில் அப்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் தாக்கியது.நாடு முழுவதும் அதிபரின் இந்த உத்தரவு செல்லும் என்றாலும், தனக்கு எதிராக வாக்களித்த தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவே இந்த நடவடிக்கை என கூறப்படுகிறது. இது தமிழர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிறிசேனா மீண்டும் எம்பி.யாக முயற்சி
இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய வெற்றி பெற்றதை தொடர்ந்து, ஏற்கனவே அதிபராக இருந்த மைத்ரி பால சிறிசேனா பதவி விலகினார். இப்போது, அவர் நாடாளுமன்ற உறுப்பினராக கூட இல்லை. இந்நிலையில், அவர் மீண்டும் எம்பி.யாக ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மூத்த எம்பி ஏஎச்எம் பவுசி குற்றம்சாட்டி உள்ளார். தேர்தலின்போது சிறிசேனாவும், அவரது லங்கா சுதந்திரா கட்சியும் கோத்தபயவுக்கு ஆதரவு அளித்தனர். ஆனால், ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு பவுசி ஆதரவு அளித்ததாக தெரிகிறது. இதனால், கடந்த வியாழன்று அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.  இலங்கையில் உள்ள விதிமுறைப்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரை அவரே ராஜினாமா செய்யாமல் நீக்க முடியாது. இந்நிலையில், பவுசி நேற்று கூறுகையில், “என்னை நாடாளுமன்றத்தில் இருந்து நீக்கிவிட்டு  சிறிசேனா என்னுடைய இடத்தை பிடிக்க முயற்சிக்கிறார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்துக்கு செல்வேன்,” என்றார்.

Tags : match ,Gotabhaya , Gotabhaya,launches,match
× RELATED 2வது டி.20 போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்