``உங்களுக்கு காலைக்கடன்... எங்களுக்கு ஜென்மக்கடனா...?’’ என்ற வாசகத்தைப் படிக்கும் போதெல்லாம் இனம்தெரியாத குற்ற உணர்வு ஏற்படுகிறது. கழிப்பறை மூலம் நோய் பரவாமல் இருக்க எத்தனை எத்தனையோ பளிச் விளம்பரங்கள். ஆனால், அந்த கழிப்பறை கழிவுகளைச் சுத்தம் செய்யும் சமூகத்தின் வாழ்க்கை நெடுங்காலமாக இருளடைந்து கிடக்கிறது. அணுவியல், விண்வெளி, உயிரி, தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், பாதுகாப்பு போன்ற துறைகளில் இந்தியா பல சாதனைகளைப் புரிந்து வருகிறது. குறிப்பாக, தொழில்நுட்ப செயல்பாடுகளுக்காக அதிகளவில் முதலீடுகளை ஈர்க்கும் நாடுகளுக்கிடையே மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. நிலவில் தண்ணீர் இருப்பதை சந்திரயான் 1 விண்கலத்தை ஏவி கண்டுபிடித்தும் விட்டது. ஆனால், மனிதனை மலக்குவியலுக்குள் இறக்கி விடாமல் அடைப்பை சரி செய்வதற்கான தொழில்நுட்பம் தான் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கிறது. ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க, வீட்டை மட்டுமல்லாமல், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக, சுகாதாரமாக வைத்துக் கொள்வோம் என உலக கழிப்பறை தினத்தில் உறுதிமொழி எடுக்கப்படுகிறது. ஆனால், எப்போது வேண்டுமானாலும் உயிர்குடிக்கக் காத்திருக்கும் மலக்குழிகளைச் சுத்தம் செய்யும் மனிதர்களின் ஆரோக்கியம் குறித்து அரசு என்ன உறுதி மொழி எடுத்துள்ளது?]
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறையான ரயில்வேயில் 16 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். தினமும் 14 ஆயிரத்து 444 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் ஆண்டுக்கு 500 கோடி பேர் பயணம் செய்கின்றனர். ரயில் தண்டவாளங்களில் சிதறிக்கிடக்கும் மனிதக்கழிவுகளை மனிதர்கள் தான் இன்னமும் அகற்றி வருகின்றனர். மனிதக்கழிவை மனிதன் அகற்றக் கூடாது என்ற சட்டத்தை மீறி அரசு நிர்வாகமே ஊழியர்களை பயன்படுத்தி வருகிறது. `பயோ டாய்லெட்’ என்ற செயல்படாத கழிப்பறைகளை பெயருக்கு ரயில்வே வைத்துள்ளது. 1993ம் ஆண்டு முதல், 2019 ஜூன் 30ம் தேதி வரை இந்தியா முழுவதும் மனிதக்கழிவுகளை மனிதனே அள்ளுதல் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது சுமார் 776 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் மட்டும் 213 பேர் பலியாகி உள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் சமூக நீதித்துறை இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்தியாவில் இப்படியான உயிரிழப்பில் கிட்டத்தட்ட 45 சதவீதம் தமிழகத்தில் தான் நடப்பது தான் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.15 ஆயிரம் கோடி நிதி
கழிவுநீர்த் தொட்டி, மலக்குழிக்குள் இறங்க மனிதர்களைப் பயன்படுத்தக்கூடாது என தேசிய துப்புரவாளர் ஆணையத்தின் விதி உள்ளது. இந்த விதியை கடுமையாக பின்பற்ற வேண்டும் என அனைத்து மாநிலத் தலைமைச் செயலர்களுக்கு துப்புரவாளர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் இந்த உத்தரவு பின்பற்றப்படுவதில்லை என்பதைத் தான் மலக்குழி மரணங்கள் எடுத்துரைக்கின்றன. பாதாளச்சாக்கடை அடைப்பை எடுக்கும் போது விஷவாயு தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு உடனடியாக 10 லட்ச ரூபாயை சம்பந்தப்பட்ட உரிமையாளர் அல்லது செப்டிக் டேங்க் வண்டி காண்ட்ராக்டர் அளிக்க வேண்டும். அத்துடன் உயிரிழப்புக் காரணமானவர்கள் மீது ஐபிசி 304(1) அதாவது அஜாக்கிரதையாக இருந்து உயிரிழப்பு ஏற்பட காரணமாக இருத்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற விதியும் உள்ளது. இந்த விதிகள்படி, தமிழகத்தில் இதுவரை உயிரிழந்த குடும்பங்களுக்கு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதா என்பது மில்லியன் டாலர் கேள்வி. இதுவரை எத்தனை பேர் இந்த பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற கேள்விக்கு இதுவரை தமிழக அரசு பதிலளிக்கவில்லை. இந்த லட்சணத்தில் தான் 2018 -19ம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்திற்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளம்பரப்படுத்தியுள்ளது.
தூய்மை இந்தியா இயக்கம் 2014ம் ஆணடு துவக்கப்பட்ட போது இந்தியாவின் தூய்மையின் அளவு 38.7 சதவீதம் என்றும், அது 2019ல் 98.9 சதவீதமாக மாறியுள்ளது என அந்த இயக்கத்தின் இணையதளம் கூறுகிறது. ஆனால், இந்தியாவில் திறந்த வெளியில் மலம் கழிப்பவர்கள் எண்ணிக்கை கோடிக்கணக்கில் இருப்பதாக பில்கேட்ஸால் துவங்கப்பட்ட ‘கேட்ஸ் பவுண்டேஷன்’ அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் மலக்குழி மரணம் குறைவாக நடைபெற்ற மாநிலம் கேரளா தான். 2017ம் ஆண்டு அங்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் மலக்குழி மரணத்தைத் தடுக்க அந்த மாநில அரசு ரோபோ கண்டுபிடித்துள்ளது. வைஃபை மற்றும் ப்ளூடூத் வசதிகளுடன் கூடிய இந்த ரோபோவில் சாக்கடைகளை சுத்தப்படுத்துவதற்காக கை போன்ற பகுதியும், அதனை கட்டுப்படுத்துவதற்கான கருவிகளும் பொறுத்தப்பட்டுள்ளது. ஜென் ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த ரோபோ திருவனந்தபுரத்தில், முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கும்பகோணம், கோவையில் மட்டும் இந்த ரோபோ பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மனிதக்கழிவை மனிதன் அகற்றும் திட்டத்தை முற்றிலும் ஒழிக்க இந்த ரோபோ வாங்க வேண்டியது காலத்தின் அவசியம். மலம் அள்ளும் தொழிலாளர்களை அந்த தொழிலில் இருந்து மீட்டு மாற்றுப்பணி வழங்க வேண்டும். அவர்களுக்கு உரிய மருத்துவ வசதி, குடியிருப்பு உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. ஆனால், அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மறுவாழ்வு நிதி 95 சதவீதம் வெட்டப்பட்டு விட்டது. பிறகெப்படி அவர்களது நலனைக் காப்பது? மலக்குழி மரணங்கள் இனியும் ஏற்படாமல் தடுக்க தேவை அனுதாபம் அல்ல. கடுமையான நடவடிக்கை தான். திறந்தவெளியில் மலம் கழிப்பது எப்படி குற்றமோ, அதேபோல அதை மனிதரை கொண்டு அகற்றச் சொல்வதும் குற்றமோ குற்றம் என்ற நிலை வரவேண்டும். வருமா?
ஓய்வுக்கு முன் 80 சதவீத சாவு
தமிழகத்தில் 15 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 12,524 கிராம ஊராட்சிகளில் துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என சுமார் 35 ஆயிரம் பேர் பணியாற்றுவதாக கூறப்படுகிறது. தூய்மை என்பது குப்பையை அகற்றுவது என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. குப்பையின் துர்நாற்றத்தை விட, பல மடங்கு கொடுமையானது மலத்தின் வீச்சம். மாநகராட்சி, பேரூராட்சிகளில் தூய்மைப்பணி என்பதும் மக்கும் குப்பை, மக்கா குப்பையைப் பிரிப்பதில் தான் உள்ளது. பாதாளச்சாக்கடையில் இருந்து வெளியேறும் மலக்கழிவுகள் உள்ளே அடைப்பு ஏற்பட்டு சாலையில் பெருக்கெடுத்தால், அந்த அடைப்பை சரிசெய்ய உரிய நவீன உபகரணங்கள், அதற்கான கருவிகள் தமிழகத்தில் இல்லை. கையுறை, மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகள் இல்லாமல் பாதாளச்சாக்கடைக்குள் இறங்க ஒப்பந்த தொழிலாளிக்கு வழங்கப்படும் கூலி வெறும் 600 ரூபாய். அப்படி மலக்குழிக்குள் இறங்கும் போது தான் விஷவாயு தாக்கி தொழிலாளி இறந்து போகிறார்.
இப்படியான சாவு ஒருபுறம் என்றால், துப்புரவுப் தொழிலாளர்கள் ஓய்வு பெறுவதற்குள் நோய் தாக்கி 80 சதவீதம் பேர் இறந்து போவதாக தேசிய துப்புரவுத் தொழிலாளர் ஆணையம் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் ஏராளமானோர் தோல், சுவாசக்கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும், பலர் மனநோயாளியாக மாறி விடுகின்றனர். நாசியை விட மனதைப் புரட்டும் மலவாசனையை பொறுக்க முடியாமல் பலர் குடிநோயாளிகளாக மாறி விடுகின்றனர். நமது குழந்தைகள் மலம் கழித்தால் கூட மறந்தும் கூட வலது கையைப் பயன்படுத்துவதில்லை. இடதுகை கொண்டு தான் நீர் மூலம் கழுவி விடுகிறோம். ஆனால், ஊர் மக்களின் மலக்கழிவுகள் நிரம்பிய பள்ளங்களுக்குள் ஒரு மனிதனை இறக்கி சுத்தம் செய்யும் வளர்ச்சியில் தான் தூய்மை இந்தியா இருக்கிறது. மனிதக்கழிவு மனிதனே அகற்றுவது தண்டனைக்குரிய குற்றம் என்றாலும், இந்தியாவில் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் இந்த தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றால், குற்றவாளி யார்?
வந்து விட்டது பயோ டைஜஸ்டர்
மனிதக்கழிவை மனிதனே அகற்றாமல் இருக்க ‘பயோ டைஜஸ்டர் செப்டிக் டேங்க்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செப்டிக் டேங்குகளை கோவையில் உள்ள ஒரு நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது கழிப்பறை நிரம்பிய ஒவ்வொரு முறையும் சுத்தப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் மரணம், நிலத்தடி நீர் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது. ஆனால், பயோ-டைஜஸ்டர் பயோடேங்கில் நிரப்பப்படும் பாக்டீரியாக்கள் 99.9 சதவீத கழிவுகளை மக்கச் செய்து, மறு பயன்பாட்டுக்கு உதவும் நீராகவும், வாயுவாகவும் மாற்றி வெளியேற்றும். இதிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்.
என்ன கொடுமை சார் இது?
தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் மிக கடுமையாக இருக்கிறது. இதற்கு உதாரணம், தமிழக சட்டசபையில் உள்ள 14 துப்புரவு பணி இடங்களுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் முடித்த பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். எம்.டெக், எம்.சி.ஏ போன்ற உயர்கல்வி படித்தவர்களும் இதில் அடக்கம். தகுதியில்லாத 677 பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு 3,930 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. இவ்வளவு பெரிய படிப்பு படித்தும், அவர்களுக்கு மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெறும் 15 ஆயிரம் ரூபாய் என்பது தான் மிகப்பெரிய வேதனை.
தடை இருப்பது தெரியுமா?
கையால் மலம் அள்ளுவதைத் தடை செய்யும் சட்டம் 2013, செப். 6ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் இயற்றப்பட்ட பிறகு இந்தியாவில் 13 ஆயிரத்து 368 மலக்குழி மரணங்கள் நடந்துள்ளதாக தூய்மை தொழிலாளர் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் மலக்குழி மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது வேதனை செயலாகும். நகர்ப்புற வளர்ச்சியின் அபரீதமான வேகத்தால் உருவாக்கப்படும் அபார்ட்மென்ட்ஸ், விடுதிகள், ஹோட்டல்கள், ரிசார்ட் சென்டர்கள், மால்கள், வீடுகள், திருமண மண்டபங்கள் போன்றவற்றில் இருந்து வெளியேறும் மனிதக்கழிவுகளின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவற்றை வெளியேற்றுவதற்கான அறிவியல்பூர்வமான நடவடிக்கை அரசிடம் இல்லை. மனிதக்கழிவுகள் மட்டுமின்றி இறந்து போன மிருகங்களின் உடல்கள், மருத்துவமனை கழிவுகள், கண்ணாடி துண்டுகள் ஆகியவை நிரம்பியிருக்கும் பாதாளச்சாக்கடைக்குள் மனிதனை இறக்கி தலைமூழ்கி அடைப்பை எடுக்கச் சொல்லும் தொழில், இந்தியாவில் தொடர்வதன் பின்னணியில் இருப்பதற்கு காரணம் எது என்ற கேள்வி முன்னெழுகிறது.
