மஞ்சூர்: மஞ்சூர்-கிண்ணக்கொரை சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து நேற்று முன்தினம் தாய்சோலை, கேரிங்டன், கோரகுந்தா, அப்பர்பவானி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் கேரிங்டன் என்ற இடத்தில் சாலையோரம் இருந்த ராட்சத மரம் ஒன்று வேறோடு சாய்ந்து ரோட்டில் குறுக்கே விழுந்தது. இதனால் மஞ்சூர்-கிண்ணக்கொரை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மஞ்சூர் மற்றும் கிண்ணக்கொரை, இரியசீகை, அப்பர்பவானி பகுதிகளில் இருந்து சென்ற அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் சாலையின் இருபுறங்களிலும் அணிவகுத்து நின்றது. தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறையினர் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று சாலையில் விழுந்த மரத்தை ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியோடு வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த சம்பவத்தால் மஞ்சூர்-கிண்ணக்கொரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.