×

தொடர்ந்து அழுததால் ஆத்திரம் ஒன்றரை வயது பெண் குழந்தையை போதையில் கொன்ற கொடூர தாய்: வேலூர் அருகே பரபரப்பு

வாலாஜா: தொடர்ந்து அழுததால் துப்பட்டாவால் முகத்தை அழுத்தி மூச்சு திணறடித்து பெண் குழந்தையை குடிபோதையில் கொலை செய்த கொடூரத்தாயை போலீசார் கைது செய்தனர்.வேலூர் மாவட்டம், வாலாஜா திரவுபதியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் அம்மு (எ) பவித்ரா(25). கணவனை பிரிந்து ஜவுளிக்கடையில் வேலை செய்து குடும்பம் நடத்தி வருகிறார். இவருக்கு ரம்யா(8), மவுலிகா (ஒன்றரை வயது) என இரு மகள்கள். இதில் ரம்யா   3ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்நிலையில், நேற்று முன்தினம் குழந்தை மவுலிகா அழுதுகொண்டிருந்தது. இதனால் பவித்ரா குழந்தையை சரமாரியாக அடித்தாராம். இதில் மயங்கிய குழந்தையை உடனடியாக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து விசாரித்த வாலாஜா போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து பவித்ராவை கைது செய்தனர். அப்போது பவித்ரா போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: எனக்கும்  வாலாஜா அடுத்த வன்னிவேடு  கிராமத்தை சேர்ந்த கவுரிசங்கருக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நான் காஞ்சிபுரத்தில் ஜவுளி கடையில் வேலை செய்து வருகிறேன். எனக்கு குடி பழக்கம் உள்ளது. வேலைக்கு ஒழுங்காக செல்லமாட்டேன். ஒன்றரை ஆண்டுக்கு முன்பு கணவர் பிரிந்து சென்றுவிட்டார். நான் தனியாக வசித்து வருகிறேன். போதுமான வருமானம் இல்லாததால், குடிப்பதற்கு பணம் இல்லையென்றால் ஆத்திரத்தில் குழந்தைகளை அடிப்பேன். நேற்றுமுன்தினம் வேலைக்கு செல்லவில்லை.  குடிபோதையில்  இருந்தேன்.

 ஒன்றரை வயது குழந்தை மவுலிகா தொடர்ந்து அழுது கொண்டிருந்தாள். அவளை திட்டியபடி அடித்தேன். ஆனாலும் அழுவதை நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நான் அவள் முகத்தின் மீது துப்பட்டாவை வைத்து அழுத்தினேன். இதில் அவள் மூச்சு பேச்சு, இல்லாமல் மயங்கி கிடந்தாள். இதனால் பயந்துபோய் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன். அங்கு டாக்டர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.



Tags : Vellore ,Parabharam ,Old Girl ,Vellore Near Parambaram , constant ,crying, mother ,girl , drunkenness
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...