கட்சியும் குடும்பமும் உடைந்து விட்டதாக சரத் பவார் மகள் சுப்ரிய சுலே வேதனை தெரிவித்துள்ளார். அவர் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் ‘ஃபேமிலி அண்ட் பார்ட்டி ஸ்பிளிட்’ என்ற வாசகத்தை வைத்துள்ளார். மேலும், ‘‘நீங்கள் உங்கள் வாழ்க்கையில் யாரை நம்பினீர்களோ அவர்கள் உங்களுக்கு துரோகம் இழைப்பார்கள் என நினைத்து பார்த்திருக்க மாட்டீர்கள், அவரை பாதுகாத்தோம், நேசித்தோம், அதற்கு என்ன கைமாறு கிடைத்திருக்கிறது என பாருங்கள்’’ என்று சுப்ரியா சுலே வைத்துள்ள மற்றொரு ஸ்டேட்டசில் கூறப்பட்டுள்ளது.
95 ஆயிரம் கோடி ஊழல்?
அஜித் பவார், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கடந்த 2010ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராகவும், மாநில நீர்ப்பாசன துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். அப்போது, ரூ.70 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன துறையில் ஊழல் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இததொடர்பாக அவர் மீது பட்நவிஸ் ஊழல் வழக்கு பதிவு செய்தார். மேலும், சமீபத்தில் மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கியில் நடந்த ரூ.25,000 கோடி ஊழலில் அஜித் பவார், சரத் பவார் மீது அமலாக்கத்துறையால் வழக்குபதிவு செய்யப்பட்டது. இதன் விசாரணை வளையத்திற்குள் சிக்கிய உடனேயே, பாஜ.வுக்கு ஆதரவாக அஜித் பவார் அதிரடி முடிவு எடுத்திருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
குடும்ப சண்டையை பயன்படுத்திய பாஜ
அரசியலில் மளமளவென உச்சத்தை தொட்ட சரத் பவாருக்கு பல வழிகளில் பெரும் உதவியாக அஜித் பவார் இருந்தார். இதனால், சரத் பவாருக்கு பிறகு கட்சி தலைவராகி விடலாம் என்றிருந்த அஜித் பவாருக்கு, அடுத்தடுத்த அதிர்ச்சிகளை தந்தார் சரத். கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் மகள் சுப்ரியா சுலேவை அரசியலில் களமிறக்கினார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பெரிய மருமகன் ரோகித்தையும் கொண்டு வந்தார். இதனால், கட்சியில் நம்பர்-2 ஆகவே இருந்து விடுவோமோ என்ற கவலை அஜித் பவாருக்கு ஏற்பட்டது. இதற்கிடையே, சில ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி அஜித் பவாருக்கு நெருக்கடி ஏற்பட்ட நிலையில், குடும்பத்திலும் பிரச்னை ஏற்பட்டது.
அவர், எதிர்க்கட்சிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்துவதாக சுப்ரியா சுலே, தனது தந்தை சரத் பவாரிடம் குற்றம்சாட்டினார். இதனால், கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது அவருக்கு சீட் கொடுக்க கூடாது என்றும், தேர்தல் பணியில் இருந்து விலக்கி வைக்க வேண்டுமென கூறினார். இது அஜித் பவாருக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட பாஜ, குடும்ப சண்டையை வைத்து சரியான நேரத்தில் அஜித் பவாரை வளைத்து ஆட்சியை பிடித்து விட்டது.