×

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பயங்கரம் கம்பெனி அதிபர் வெட்டிக்கொலை: பீகாருக்கு விரைந்தது தனிப்படை

சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கம்பெனி அதிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய பீகாரை சேர்ந்த 2 வாலிபர்களை தேடி வருகின்றனர். சென்னை வியாசர்பாடி அடுத்த பெரியார் நகர், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (27). அம்பத்தூர்-வானகரம் நெடுஞ்சாலை, நடேசன் நகரில் இரும்பு பைப்புகளுக்கு துரு அகற்றும் கம்பெனி நடத்தி வந்தார். இவரது மனைவி நந்தினி (25). தம்பதிக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டு ஆகிறது. தற்போது 5 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. இவருடைய கம்பெனியில் 5 பேர் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் பீகாரை சேர்ந்த 2 வாலிபர்கள் கடந்த 5 நாட்களுக்கு முன் வேலைக்கு சேர்ந்தனர். நேற்று முன்தினம் காலை பிரபாகரன் கம்பெனியில் பணிகளை கவனித்து கொண்டிருந்தார். மதியம் 11 மணிக்கு முகப்பேரை சேர்ந்த கான்டிராக்டர் ஒருவர் அங்கு வந்து, வேலைக்கான ஆர்டர் மற்றும் அதற்கான பணத்தை கொடுத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் பிரபாகரனை அவரது தந்தை ஆனந்தன் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் செல்போனை பிரபாகரன் எடுக்கவில்லை.

மகன் வேலையில் பிசியாக இருப்பார் என்று ஆனந்தன் நினைத்து அமைதியானார். அவர் மீண்டும் மாலை 6.30 மணிக்கு மீண்டும் தொடர்பு கொண்டபோது பிரபாகரன் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. எனவே அவர் அக்கம் பக்கத்து கம்பெனிகளை தொடர்பு கொண்டு மகன் குறித்து விசாரித்துள்ளார். பக்கத்து கம்பெனி ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தபோது பிரபாகரன் இல்லை. அவரது பைக் மட்டும் இருப்பது தெரிந்தது. இதுகுறித்து அவர்கள் ஆனந்தனுக்கு தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனந்தன் இரவு 9.30 மணிக்கு கம்பெனிக்கு வந்து பார்த்தபோது பிரபாகரன் அறை பூட்டப்பட்டிருந்தது. உள்ளே, மின் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மேலும் மின்விசிறி ஓடிக்கொண்டிருந்தது. எனவே சந்தேகம் அடைந்த ஆனந்தன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பிரபாகரன் தலை, முகத்தில் அரிவாளால் வெட்டியும், இரும்பு பைப்பால் அடித்தும் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிந்தது. தகவலறிந்து அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது பிரபாகரன் பாக்கெட்டில் இருந்த விலை உயர்ந்த செல்போன், கான்டிராக்டர் கொடுத்த பணம், பர்சில் இருந்த பணம் கொள்ளை போய் இருந்தது.

இதையடுத்து அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின்பேரில் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பிரபாகரனிடம் கான்டிராக்டர் பணம் கொடுத்ததை பீகார் மாநில ஊழியர்கள் 2 பேரும் பார்த்திருக்கலாம். மதியம் பிரபாகரன் சாப்பிட்டு விட்டு ஓய்வறையில் தூங்கியபோது அவர்கள் இருவரும் சேர்ந்து பிரபாகரனை வெட்டி கொன்றுவிட்டு பாக்கெட்டில் இருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் பணத்தை  எடுத்துக்கொண்டு தப்பி இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதையடுத்து தப்பி ஓடியவர்கள் குறித்து பீகார் மாநிலத்தை சேர்ந்த அவரது நண்பர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 3 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் பீகாருக்கு விரைந்துள்ளனர்.

Tags : Vettikolai ,Ambattur Industrial Estate Company ,Bihar Ambattur Industrial Area Company ,Bihar , Terror , Ambattur industrial , Vettikolai, Bihar
× RELATED தேவகோட்டையில் ஆக்கிரமிப்பு...