×

பவானிசாகர் அருகே ஆடுகளை கடித்து அட்டகாசம் செய்யும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை கூண்டு

சத்தியமங்கலம்: பவானிசாகர் அருகே கிராமத்தில் புகுந்து அட்டகாசம் செய்துவரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள பசுவபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (50). இவர், 5க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வந்தார். கடந்த 14ம் தேதி அதிகாலை, வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தை பசுவபாளையம் கிராமத்தில் புகுந்து சுப்பிரமணிக்கு சொந்தமான பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 5 ஆடுகளில், 3 ஆடுகளை அடித்துக் கொன்றது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்தனர். அட்டகாச சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் அவர்கள், வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, தானியங்கி கேமராக்கள் பொருத்தி, அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என கண்காணிக்கப்பட்டது. இதில், சிறுத்தை நடமாட்டம் பதிவானதை தொடர்ந்து, பவானிசாகர் வனத்துறையினர் சிறுத்தையை பிடிப்பதற்காக நேற்று கிராமத்தை ஒட்டியுள்ள விவசாய நிலத்தில் கூண்டு வைத்தனர். கூண்டில் ஆடு ஒன்றை கட்டி வைத்து, இரவு முழுவதும் வனத்துறை ஊழியர்கள் கண்காணித்தனர். ஆனால், சிறுத்தை வரவில்லை. சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்ததால், கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


Tags : forest department ,Bawanisagar , Bawanisagar, biting goats, attacking, catching leopard, forest cage
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...