கொழும்பு: இலங்கையில் தமிழர் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்து செல்லும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழர் பகுதிகள் உள்பட பல இடங்களில் பாதுகாப்பு, மற்றும் பொது அமைதியை ஏற்படுத்த இந்த நடவடிக்கை என இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார். அவசர சட்டம் நேற்றிலிருந்து அமலுக்கு வந்ததாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று கோத்தபய ராஜபக்சே அதிபரானார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சஜீத் பிரேமதாசா தோல்வி அடைந்ததால், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, தனது சகோதரரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சேவை நாட்டின் புதிய பிரதமராக அதிபர் கோத்தபய நியமித்தார். நேற்று முன்தினம் அவர் பிரதமராக பொறுப்பேற்றார். இந்நிலையில், புதிய அரசு அமைக்கப்படும் வரையில் அரசு நிர்வாகத்தை கவனிப்பதற்காக 16 அமைச்சர்கள் கொண்ட இடைக்கால அமைச்சரவையை கோத்தபய நேற்று நியமித்தார். இந்நிலையில் இலங்கையில் தமிழர் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்து செல்லும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.